கும்பகோணத்தில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு ஊருக்கு வந்த புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே துளுக்கவெளி பகுதியை சேர்ந்த சரண்யா (24). இவர் திருவண்ணாமலையை மாவட்டத்தை சேர்ந்த மோகன் (31) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் மறுப்பு
இந்நிலையில் சரண்யாவின் காதல் அவரது வீட்டுக்கு தெரிய வரவே அவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் முடிக்க ஏற்பாடுகள் செய்து உள்ளார்.
காதல் திருமணம்
இதனை அறிந்த சரண்யா கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் மோகனுடன் திருமணம் செய்துகொண்டு சென்னையில் இருந்துள்ளார். இந்நிலையில் புதுமண தம்பதிகளை விருந்துக்கு அழைப்பதாக கூறி அவரது சகோதரர் சக்திவேல் வரவழைத்துள்ளார். இதனை நம்பிய சரண்யா மற்றும் மோகன் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
தம்பதியர் கொலை
புதுமணத் தம்பதி வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இருவருக்கும் தண்ணீர் கொடுத்துள்ளனர். தண்ணீரை வாங்கி அவர்கள் குடித்த போது அவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமண தம்பதிகளை வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணை
இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த சோழப்புரம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பெண்ணின் சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் இருவரும் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இச்சம்பவம் கும்பகோணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.