வடமொழியில் ‘சவ’ என்றால் ‘இறந்த உடல்’ என்று பொருள். இறந்த உடல் போல் அசையாமல் படுத்திருக்க வேண்டும் என்பதால் இந்த ஆசனம் சவாசனா என்று வடமொழியிலும் சவாசனம் என்று தமிழிலும் Corpse Pose என்று ஆங்கிலத்திலும் வழங்கப்படுகிறது. இதனை ‘சாந்தி ஆசனம்’ என்றும் கூறலாம்.
இந்த ஆசனத்தை பழகும்பொழுது உடலை தளர்வாக வைத்திருக்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலிலிருந்து விடுபட்டு நம் உடலின் மேல் நம் மனம் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஓய்வாக இருப்பதை உணர வேண்டும், உடலுக்குள் ஆற்றல் பெருகுவதை உணர்ந்து ஏற்க வேண்டும்.

எதிர்மறை எண்ணங்கள் விலக்கவும், நேர்மறை எண்ணங்களால் மனதை நிறைக்கவும் பழக வேண்டும்.
சாந்தி ஆசனத்தால் ஏற்படும் பலன்கள் :
உடலுக்கு ஓய்வு அளிக்கிறது, உடலின் ஆற்றலைப் பெருக்குகிறது.
அதிக இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
குனிந்தும், நிமிர்ந்தும், வளைந்தும் முதுகுத்தண்டுக்கும், தசைகளுக்கும், மூட்டுகளுக்கும் கொடுத்த கடின உழைப்பிற்குத் தேவையான ஓய்வு சாந்தி ஆசனத்தில் கிடைக்கிறது.
இது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
சுவாசத்தில் மனதை வைப்பதால், நுரையீரலின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

இருதய படபடப்பு சரியாகிறது.
தூக்கமின்மையைப் போக்குகிறது.
தலைவலியைப் போக்குகிறது.
உடல் சோர்வை நீக்குகிறது.
பதட்டம், கவலை ஆகியவற்றைப் போக்குகிறது.
தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது.
மனதை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது.
செய்முறை :
விரிப்பில் படுக்கவும்.
கால்களை விரித்தும் கைகளை உடலிலிருந்து சற்று விலக்கியும் வைத்துப் படுக்கவும்.
கண்களை மூடிக் கொள்ளவும்.
முதலில் மூச்சில் கவனத்தை செலுத்தவும்.
சிறிது நேரம் மூச்சை உள்ளிழுப்பதிலும் வெளியே விடுவதிலும் கவனத்தைச் செலுத்தவும்.
கால் விரல் தொடங்கி, ஒவ்வொரு உறுப்பாக மேல் நோக்கி மெதுவாக மனதை செலுத்தவும்.
ஒவ்வொரு உறுப்பில் மனதை செலுத்தும் போதும், அந்த உறுப்பு இறுக்கமாக இருந்தால் தளர்த்தி, அந்தத் தளர்வை உணரவும்.

முதலில் வலது கால் விரலில் தொடங்கி வலது தொடை வரை கவனம் செலுத்தி தளரச் செய்தபின், இடது காலிலும் அதே முறையைப் பின்பற்றவும்.
பின் ஒவ்வொரு உறுப்பாக உச்சந்தலை வரை உங்கள் கவனத்தைச் செலுத்தவும்.
உடல் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் பரவுவதை மனதால் உணரவும்.
சிறிது நேரம் மீண்டும் சுவாசத்தில் மனதை வைக்கவும்.
சுமார் பத்து நிமிடங்கள் சாந்தி ஆசனத்தில் இருக்கவும்.
பின் மனதை உடலின் மேல் மெதுவாகத் திருப்பவும்.
பின் வலது புறம் திரும்பவும். இடது கையை உடலின் முன்பாக மார்புக்கு அருகே வைத்து எழுந்து சுகாசனத்தில் அமரவும்.
சில வினாடிகளுக்குப் பின் கண்களை மெதுவாகத் திறக்கவும்.
குறிப்பு :
கர்ப்பிணிப் பெண்கள் தலைக்கு உறுதியான தலையணை அல்லது மடித்த கம்பளம் போன்ற ஒன்றை வைத்துப் படுக்கவும்.
நீண்ட நேரம் படுத்திருப்பதில் சிரமம் உள்ளவர்கள், கால் முட்டிக்கு அடியில் தலையணை அல்லது yoga block வைத்துப் படுக்கவும்.

