வீட்டில் குழந்தைகள் இருந்தால் அந்த இடமே எப்போதும் கலகலப்பாக இருக்கும். அதே சமயம், அவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொடுப்பதற்குள் நமக்கு போதும் போதுமென்று ஆகிவிடும். “இப்பதானே சொன்னேன், அதுக்குள்ள மறந்துட்டியா?” என்று நாம் கேட்காத நாட்களே இருக்காது.
இன்றைய சூழலில் சுற்றிலும் ஏகப்பட்ட கவனச்சிதறல்கள் இருப்பதால், குழந்தைகளுக்கு ஒரு விஷயத்தில் கவனத்தைக் குவிப்பதும், அதை நினைவில் வைத்துக்கொள்வதும் சவாலாகவே இருக்கிறது. நாம் எவ்வளவுதான் சொல்லிக்கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடும் உணவுதான் அவர்களின் மூளை வளர்ச்சிக்கும், யோசிக்கும் திறனுக்கும் அஸ்திவாரமாக அமைகிறது.
சிறு வயதிலேயே சரியான சத்துக்கள் கிடைத்தால், அது அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, எதிர்காலத்தில் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கவும் உதவும். அந்த வகையில் குழந்தைகளில் மூளை வளர்ச்சிக்கு சிறுவயதிலே கொடுக்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
டார்க் சாக்லேட்: சாக்லேட் என்றாலே ஓடி வரும் குழந்தைகளுக்கு டார்க் சாக்லேட் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் உள்ள ‘ஃபிளாவனால்ஸ்’ என்ற சத்து மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, அவர்களின் மனநிலையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
‘NIH’ ஆய்வுத்தளத்தில் வெளியான ஒரு ஆய்வின்படி, கோகோவில் உள்ள இந்த சத்துக்கள் மூளை திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை சீராகக் கொண்டு செல்கின்றன. இது மூளை செல்கள் வளர்வதற்கும், பிற்காலத்தில் ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கவும் பெரிய அளவில் உதவுகிறது. இதை அப்படியே சாப்பிட கொடுக்கலாம் அல்லது அவர்களுக்கு பிடித்தமான மில்க் ஷேக், ஸ்மூத்தி அல்லது கேக் போன்றவற்றில் கலந்து கொடுத்து அசத்தலாம்.
சூரியகாந்தி விதைகள்: நம்மில் பலரும் சாதாரணமாக நினைக்கும் சூரியகாந்தி விதைகளில் மூளைக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் ‘ஈ’ சத்து, வயது ஏறினாலும் நினைவாற்றல் குறையாமல் பார்த்துக்கொள்ளும்.
மேலும் இதில் உள்ள மெக்னீசியம் மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. குழந்தைகள் இந்த விதைகளை அதன் தன்மையிலே சாப்பிட கஷ்டப்படுவார்கள். அதனால், இதை நன்றாக பொடி செய்து சப்பாத்தி மாவுடன் கலந்து பிசையலாம் அல்லது அவர்கள் குடிக்கும் பால் மற்றும் ஸ்மூத்திகளில் ஒரு ஸ்பூன் கலந்து கொடுத்தால் அதன் சுவையே தெரியாமல் சாப்பிட்டு விடுவார்கள்.
தக்காளி: தக்காளியில் உள்ள ‘லைகோபீன்’ என்ற சத்துதான் அதற்கு அந்த சிவப்பு நிறத்தைத் தருகிறது. இது மூளைச் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். தக்காளியைச் சமைத்துச் சாப்பிடும்போது அதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்குத் தக்காளி சூப் செய்து கொடுக்கலாம் அல்லது அவர்களுக்கு பிடித்த பாஸ்தா, சாண்ட்விச் மற்றும் பிரட் பீட்சாக்களில் தாராளமாக தக்காளியை சேர்த்து சுவையை அதிகரிக்கலாம்.
ப்ரோக்கோலி: காலிஃபிளவர் போன்றே இருக்கும் இந்த ப்ரோக்கோலி மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள சத்துக்கள் நினைவாற்றலை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. ப்ரோக்கோலியில் உள்ள ‘சல்ஃபோராபேன்’ என்ற சத்து மூளையில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ஞாபக மறதி போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது என NIH ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். அதனால், இதை பொடியாக நறுக்கி சப்பாத்திக்குள் வைத்து ‘ஸ்டஃபிங்’ செய்து கொடுக்கலாம் அல்லது வடை போல தட்டி கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
வால்நட்ஸ்: வால்நட் பருப்பை பார்த்தாலே அது மனித மூளை போன்ற வடிவத்தில்தான் இருக்கும். இது உண்மையிலேயே குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கான ஒரு சூப்பர் ஃபுட். இதில் உள்ள ‘ஒமேகா-3’ கொழுப்பு அமிலங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம். ஹார்வர்ட் ஹெல்த் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வால்நட்ஸில் உள்ள அமிலங்கள் ரத்த நாளங்களை சுத்தமாக வைத்து மூளைக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
இதை இரவே தண்ணீரில் ஊற வைத்துத் தரலாம் அல்லது பாதாம் பருப்புடன் சேர்த்து அரைத்து ஷேக் போலக் கொடுக்கலாம். சாக்லேட் பிடிக்கும் குழந்தைகளுக்கு, வால்நட்ஸ் மீது உருக்கிய டார்க் சாக்லேட்டைத் தடவி ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு இனிப்பான ஸ்நாக்ஸ் போலவும் கொடுக்கலாம்.
கீரை வகைகள்: பச்சைக் கீரைகளில் வைட்டமின் ‘கே’, லூட்டின் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் ஏராளம். இவை மூளையின் சிந்திக்கும் திறனை தக்க வைக்க உதவுகின்றன. கீரையில் உள்ள இயற்கையான சத்துக்கள் மூளையில் நச்சுக்கள் சேருவதை தடுத்து, மூளை எப்போதும் இளமையாக இருக்க உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
கீரையை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். அதற்கு பதிலாக, கீரையை நன்றாக அரைத்து சப்பாத்தி மாவில் கலந்து ‘கிரீன் சப்பாத்தி’யாக செய்து தரலாம்.
