நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஓர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பீகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் உள்ள மாதா ஷீதலா கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. ஏசைத்ர மாதத்தின் கடைசி நாள் இன்று (மார்ச் 31) என்பதால் அதிக அளவிலான பக்தர்கள் தரிசனத்திற்காக இக்கோயிலில் குவிந்த நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாதா ஷீதலா கோயிலுக்கு ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் பெருமளவிலான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அந்நாட்களில் அப்பகுதி முழுக்க திருவிழா போல் காட்சியளிக்கும். இந்த நிலையில் கூடுதல் சிறப்பாக சைத்ர மாதத்தின் கடைசி செவ்வாய்கிழமையாக இன்றைய தினம் அமைந்தது. அத்துடன் இன்று மஹாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக பக்தர்கள் மாதா ஷீதலா கோயிலுக்கு வருகை தந்திருந்தனர்.
தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் இந்த அசம்ாவிதம் நேர்ந்ததாக காவல் துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் அங்கு சூழல் தலைகீழாக மாறி 8 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த கோயில் நிர்வாகம் சார்பில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே உயிரிழப்புக்கு காரணம் என்று பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
குறிப்பாக, காவல்துறையின் பாதுகாப்பு, இரும்பு தடுப்புகள் போன்ற கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கைகள்கூட அங்கு மேற்கொள்ளப்படவில்லை என்றும் பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, தரிசனத்திற்காக வந்திருந்த கீதா தேவி எனும் பக்தர் கூறும்போது, “கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகு, பக்தர்களை கோயிலுக்குள் நுழைவதை நிர்வாகத்தினர் தடை செய்துவிட்டனர். எங்களால் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய முடியவில்லை” என்றார்.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார், “கூட்ட நெரிசலில் 8 பேர் உயிரிழந்திருப்பது கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். இந்நேரத்தில் மக்களை அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். கோயில் நிர்வாகம் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அதற்கான உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

