தமிழகத்தில் ஜூலை 9ம் தேதி நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதா என்று அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
உள்ளாட்சி இடைத்தேர்தல்
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 9ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. 40 ஊராட்சி தலைவர்கள், 436 கிராம ஊராட்சி உறுப்பினர், 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 10 நகராட்சி மற்றும் 2 மாநகராட்சி கவுன்சிலர் உள்ளிட்ட 510 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஒற்றை தலைமை
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் போக்கும், சலசலப்பும் நிலவி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான படிவத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படிவத்தில் கையெழுத்து போடாத காரணத்தால் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடிதம் எழுதிய ஓபிஎஸ்
மேலும், கடந்த புதன் கிழமை ஓ .பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளர்கள் படிவங்களில் கையெழுத்திட்டு இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு வாங்க மறுத்து ஓ.பன்னீர்செல்வமிடம் திருப்பி அனுப்பி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

சுயேச்சை வேட்பாளர்
மேலும், அதிமுகவினர் கட்சியின் அங்கீகார படிவம் இல்லாத காரணத்தால் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கட்சியின் சின்னத்தை பெறுவதற்காக ஏ மற்றும் பி படிவங்களை இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதனால் அதிமுகவினர் உள்ளாட்சி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர். முக்கியமாக இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் மாநகராட்சி மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுகவினர் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


