இந்திய தலைநகரான டெல்லியில் காற்று மாசு காரணமாக வரும் 2023ம் ஆண்டு முதல் நிலக்கரியை தடை செய்து காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காற்று மாசுபாடு
உலக நாடுகளிலேயே காற்று மாசுபாடு காரணமாக அரசு விடுமுறை பிறப்பித்த இடம் டெல்லி. அதன் அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா பகுதியில் எரிக்கப்படும் விவசாய குப்பைகளால் அங்கு காற்று மாசுபாடு ஏற்படுகிறது. பல்வேறு தொழில்துறை, உள்நாட்டு மற்றும் இதர நோக்கங்களுக்காக நிலக்கரி போன்ற எரிபொருட்களின் உமிழ்வுகளால் தலைநகர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காற்றின் தரம் சீர்குலைந்து வருகிறது.

டெல்லி அரசு
மேலும், வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் புகை, கட்டுமான வேலைகள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை என்று அனைத்தும் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கியது. இதன் காரணமாக கடந்த ஆண்டு டெல்லியில் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளித்து டெல்லி அரசு அறிவித்திருந்தது.
நிலக்கரி
இந்தாண்டு மதிப்பீட்டின்படி, டெல்லியில் உள்ள தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் சுமார் 1 மில்லியன் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதைக் குறைக்கவே பல ஏற்பாடுகளை அரசு செய்து வந்தது. இதன்பெயரில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் முறையும் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் குழாய் வழியாக வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தடை உத்தரவு
இதனையடுத்து 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டெல்லி மற்றும் தேசியத் தலைநகர் முழுவதும் நிலக்கரி பயன்பாட்டைப் தடை செய்ய கோரி காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும் நிலையில் அந்த இடங்களில் நிலக்கரிப் பயன்பாட்டுத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

