இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி அதிமுக முன்னாள் உறுப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக சின்னம் முடக்கம்
அதிமுகவில் அதிகாரப் மோதல் உச்ச கட்டத்தை எட்டி வரும் நிலையில், வரும் 11ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனர் பி.ஏ ஜோசப், உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையிலான உட்கட்சி மோதல் போக்கு முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ம் தேதி அன்று மனு அனுப்பியிருந்தேன். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், இந்த மனுவானது தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.

