நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா ? என கேட்டு தாக்குதல். தாக்குதல் செய்த ஓபிஎஸ் ஆதரவாளர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.
அதிமுக ஒற்றைத்தலைமை
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே பலத்த மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இ.பி.எஸ் ஆதரவாளரான ஜெயக்குமார் தரப்பினர் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அலுவலக கூட்டத்தில் மோதல்
கடந்த 18ம் தேதி காலை 10.30 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசனை செய்யவேண்டி இருந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
அத்துடன், அவருடன் வந்த பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளர் மாரிமுத்து (59) என்பவரை அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த நபர்கள் “நீ என்ன ஜெயக்குமார் ஆதரவாளரா ?” என ஆபாசமான வார்த்தைகளால் பேசி வாயில் குத்தி தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த மாரிமுத்து அவரது மகன் முகில் ராஜ் ஆகியோர் எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உதட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு
இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிலர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், சட்ட விரோதமாக கூடி கலகம் செய்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிமுகவில் நிர்வாகிகளிடையே மோதல் போக்கு நிலவி வருவதால் அதிமுக தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

