அதிமுக எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று
இந்தியாவில் 2022ம் ஆண்டு தொடக்ககாலத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த மாதத்தில் இருந்து கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 1,461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 697 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 34,63,892 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிக பாதிப்பு
மேலும், 8,222 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று 543 பேரும், செங்கல்பட்டில் 240 பேரும், கோவையில் 181 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி மனைவி
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் இருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது இபிஎஸ்-ன் மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லேசான தொற்று இருப்பதால் அவர் தன்னை சேலத்தில் உள்ள வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார். அவரை அண்மையில் சந்தித்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


