சட்டைக்குள் சட்டை அணிந்து அதற்குள் கட்டுக்கட்டாக பணம் கடத்தி வந்த ஆந்திரா இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
சட்டைக்குள் சட்டை அணிந்து பணக் கட்டுகளை பதுக்கி கொண்டு சென்னை வந்துள்ளார் ஆந்திர இளைஞர். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெள்ளியன்று காலை ஒரு விரைவு ரயில் வந்தது. ரயில் நிலைய நடைமேடை எண் 4-ல் வந்து நின்ற ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.

ஆந்திர மாநிலம்
அப்போது ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மாவட்டத்தைச் சேர்ந்த சாய்கிருஷ்ணா என்பவர் நடந்து கொண்ட விதம் சந்தேகப்படும் படியாக இருந்துள்ளது. உடனே அவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் 61 லட்ச ரூபாய் பணத்துடன் அவர் சென்னை வந்து இறங்கியது தெரியவந்தது.
61 லட்சம் பணம்
தான் அணிந்திருந்த சட்டையை கழற்றிய சாய்கிருஷ்ணா, அதனுள் கோட் போன்ற ஆடைக்குள் பிரத்யேக அறை அமைத்து கிட்டத்தட்ட 19 லட்ச ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாய்கிருஷ்ணா வைத்திருந்த பையை சோதனையிட்ட போலீசார் அதில் 42 லட்ச ரூபாய் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

விசாரணை
இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அதனை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், சாய் கிருஷ்ணாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகை வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் சாய் கிருஷ்ணாவை வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரிடம் இருந்து கடத்தல் பணம் கைப்பற்றப்படுவது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதனால் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


