சேலத்தில் முறையற்ற தொடர்பால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். தொழிலாளியை கொலை செய்த வழக்கில் கணவன் – மனைவி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையின் பின்னணி என்ன?
சேலம் மாநகரம் பொன்னம்மாபேட்டை சுண்ணாம்புக்காரத் தெருவில் கோபால் – வனிதா தம்பதி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கோபாலின் மனைவி வனிதாவுக்கும், அதே பகுதியில் குடியிருக்கும் அசோக் என்கிற குப்பன் என்பவருக்கும் முறையற்ற தொடர்பு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கணவன் கோபால் கடந்த மூன்று வருடங்களாக அசோக் உடன் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் சனி அன்று இரவு கோபால் மற்றும் அசோக் ஆகியோருக்கு இடையே சின்ன மாரியம்மன் கோயில் அருகே வைத்து, வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. அருகே இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டநிலையில், இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அசோக் மற்றும் அவரது மனைவி மயிலு, மைத்துனர் முனியப்பன் ஆகியோர் கோபால் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இரு தரப்பினரும் அடித்துக் கொண்டிருக்கும்போது, அசோக் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கத்தியால் கோபாலின் மார்பில் பலமாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த கோபாலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் அசோக் என்கிற குப்பன் மற்றும் அவரது மனைவி மயிலு ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அசோக்கின் மைத்துனர் முனியப்பன் என்பவரை தேடி வருகின்றனர். முறையற்ற தொடர்பால் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

