திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், மூன்று பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து விழுந்த சம்பவத்தில் நடந்தது என்ன?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் 27 வயதான சிவா. பக்கத்து ஊரான சிறுகுடியில் உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் 23 வயதான பிரதீப். கடந்த மாதம் இவர்கள் இருவருக்கும் இடையே வாகனம் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முன்விரோதத்தில் மோதல் போக்கு இருந்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவில் சிவா, தனது வேனில் சிறுகுடி கல்யாண மண்டபத்திற்கு பொருட்களை ஏற்றிச் சென்றுள்ளார். பொருட்களை இறக்கிவிட்டு பின்னர் மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். இந்திரா நகர் வழியாக சென்றபோது பிரதீப் தனது நண்பர்களுடன் சேர்ந்து வேனை மறித்துள்ளார். ஆனால், பிரதீப்பின் ஏரியாவுக்குள் பிரச்சினை செய்ய வேண்டாம் என்று சிவா தனது வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இருந்தபோதும் ஆத்திரமடைந்த பிரதீப் தனது நண்பர்களுடன் தேத்தாம்பட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு சிவா மற்றும் அவருடன் வண்டியில் வந்தவர்களுடன் பிரதீப் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. திடீரென பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியை எடுத்து எதிர் தரப்பினரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில், சிவாவின் உறவினர் சிவமணி மற்றும் சண்டையை விலக்கிவிட வந்த சின்னச்சாமி, சக்தி ஆகியோருக்கு தலை, இடுப்பு, தொடை உள்ளிட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. பின்னர், இதில் படுகாயமடைந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அதேவேளையில் தேத்தாம்பட்டியைச் சேர்ந்த சிவமணி தரப்பினர் தாக்கியதில் சிறுகுடியைச் சேர்ந்த சரவணன், பொன்னையா, அருண்குமார் ஆகியோரும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் குறித்து இரு தரப்பினரும் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இரு தரப்பினரையும் சேர்ந்த சிலரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறுகுடி மற்றும் தேத்தாம்பட்டி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்விரு கிராம இளைஞர்களுக்கு இடையே யார் பெரிய ஆளு? என்று அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஆணவப் போக்கில் சில இளைஞர்கள் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

