மருமகளின் தலையை வெட்டி கொலை செய்து காவல் நிலையத்தில் சரணடைந்த மாமியாரால் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலையைவெட்டி கொலை
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராயசொட்டி அடுத்த கே.ராமாபுரத்தை சேர்ந்தவர் வசுந்தரா(35). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளன. இவரது கணவர் இறந்து விட்டார். அவர் இறப்பதற்கு முன்பாக தனது பெயரில் இருந்த வீடு உள்ளிட்ட சொத்துக்களை வசுந்தரா தனது பெயருக்கு மாற்றினார். இந்நிலையில், கணவர் இறந்த பிறகு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதால் சொத்துக்களை கள்ளக் காதலன் பெயரில் மாற்ற வசுந்தரா முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாமியார் சுப்பம்மா, மருமகளை தனது வீட்டிற்கு நேற்று மதியம் சாப்பிட அழைத்தார். அப்போது, சுப்பம்மா அவரது இளைய மகன் சந்து உதவியுடன் கத்தியால் வசுந்தரா தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர், அந்த தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பிளாஸ்டிக் உறையில் தலை வைத்து மாமியார் சுப்பம்மா கொண்டு சென்றதை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரவ விட்டுள்ளனர். இச்சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

