சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். வணிகர்களான இவர்கள், சாத்தான்குளம் பஜார் பகுதியில் செல்போன் கடை வைத்திருந்தனர். இந்த சூழலில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருந்த கால கட்டத்தில், இவர்களின் கடை குறிப்பிட்ட நேரத்தை தாண்டி திறந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதனை காரணமாக கூறி, இருவரையும் விசாரணைக்காக போலீசார் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, போலீசார் அவர்களை கடுமையாக தாக்கினர். இதில் அடுத்தடுத்து தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கை, சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அதில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையையும், இரண்டாம் கட்டமாக கூடுதலாக 400 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையையும் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: தருமபுரியில் சௌமியா அன்புமணி, பெரம்பூரில் திலகபாமா போட்டி
இந்த வழக்கு தொடர்பான விசாரணை, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 2- ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன்பாக விசாரணை நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதரிடம், நீதிபதி நேரடியாக கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் 23- ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பை வாசித்த நீதிபதி முத்துக்குமரன், “உயிரிழந்த ஜெயராஜுக்கு இருதய மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்தது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக அவர் உயிரிழக்கவில்லை. கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலயே தந்தையும், மகனும் இறந்ததாக அரசு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறியுள்ளனர். எனவே, இது கொலை என தீர்மானிக்கப்படுகிறது. தடய அறிவியல் ஆய்வும் இதைதான் கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் மார்ச் 30-ல் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது, “சாத்தான்குளம் வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் அறிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை? சாத்தான்குளம் வழக்கு மிக முக்கிய வழக்கு. எந்த கருத்தாக இருந்தாலும் பதில் மனுவாகத் தாக்கல் செய்யுங்கள்” என்று நீதிபதி முத்துக்குமரன் தெரிவித்தார்.
மேலும், இவ்வழக்கில் மத்திய, மாநில அரசுகள் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 2 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
சாத்தான்குளம் வழக்கில் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் நீதிபதி அறிக்கையைக் கேட்டிருந்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

