கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், மதுரையில் கள்ளச்சந்தையில் விற்க 398 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் பழனி (46). இவர் தனது வீட்டில் கியாஸ் சிலிண்டர்களை கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைத்திருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பழனி தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் பதுக்கி வைத்திருந்த 100 வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் 109 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் உட்பட மொத்தம் 209 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
அதே போல, கோவில்பாப்பாகுடி ஆனந்தம் நகரை சேர்ந்த மதன்குமார் (27) என்பவரின் வீட்டருகேயும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரும் சட்டவிரோதமாக 63 வீட்டு உபயோக சிலிண்டர்கள் மற்றும் 126 வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் என மொத்தம் 189 சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், இருவரிடம் இருந்து மொத்தமாக 398 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பழனி, மதன்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பரிந்துரையின் பேரில், இருவரும் தடுப்புக் காவலில் (குண்டாஸ்) அடைக்கப்பட்டனர்.
தற்போது நிலவி வரும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மத்தியில், கள்ளச்சந்தையில் சிலிண்டர்களை விற்க முயன்ற இருவர் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டிலேயே முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
மேலும், வீட்டு உபயோகத்திற்கான ஒரு சிலிண்டரை பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த சூழலை பயன்படுத்தி கியாஸ் சிலிண்டர் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

