வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் (MRTS) வழித்தடத்தில் ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளதால் மார்ச் 14 முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் (MRTS) இரண்டாம் கட்டமான வேளச்சேரி – பரங்கிமலை (St. Thomas Mount) இடையேயான புதிய நீட்டிப்புப் பாதையில் ரயில்களை இயக்குவதற்கான ‘தற்காலிக அதிகாரப்பூர்வச் சான்றிதழை’ (Provisional Authorisation Certificate) ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையரிடமிருந்து (CCRS) தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஆணையர் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, ரயில்வே நிர்வாகம் தனது தரப்பிலான அனைத்துக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளையும் முழுமையாக நிறைவு செய்துள்ளது. இந்தப் புதிய நீட்டிப்புப் பாதையில் ரயில் சேவைகளைத் தொடங்குவதற்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் தயார் நிலையில் உள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பின் மேல் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியில் (Obligatory Span) உள்ள சாரங்களை (Shuttering) அகற்ற அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் வகையில், இப்பணியை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) 24 மணிநேர அவகாசம் கோரியுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தவுடன், நாளை (14.3.2026) முதல் ரயில் சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.
சென்னை கடற்கரை – பரங்கிமலை இடையே 43 பறக்கும் ரயில் சேவைகள் இயக்கப்படும். சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 2 ரயில் சேவைகள் இயக்கப்படும். பரங்கிமலை – வேளச்சேரி இடையே 3 ரயில் சேவைகள் இயக்கப்படும். இந்த நீட்டிப்பு, பறக்கும் ரயில் தடத்தில் நேரடி இணைப்பை உறுதி செய்வதோடு, தினசரி பயணிகளுக்கு தடையற்ற பயண அனுபவத்தை வழங்கும்.
புதிய பாதையின் திறப்பு, சென்னையின் புறநகர் ரயில் போக்குவரத்து கட்டமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். குறிப்பாக, பரங்கிமலை ரயில் நிலையம் பறக்கும் ரயில் (MRTS), தெற்குப் புறநகர் ரயில் (Suburban) மற்றும் சென்னை மெட்ரோ ரயில் ஆகிய மூன்று முக்கிய போக்குவரத்து அமைப்புகளையும் இணைக்கும் ஒரு ‘ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக’ (Multimodal Integration) உருவெடுக்கும்.
சென்னை நகர மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் திறமையான ரயில் சேவைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வழங்குகிறது.

