தாம்பரம் அருகே தனியார் பள்ளி பெண் முதல்வரை அடித்து தாக்கி, பாலியல்ரீதியாக துன்புறுத்திய கட்டுமான தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 36). இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு யோகேஷ் என்பருடன் திருமணம் நடந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
மேலும், அவர் தனியார் சிறுவர்கள் பள்ளி ஒன்றில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், மேடவாக்கம் பெல் நகர் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்பவருடன் பாத்திமாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிகிருஷ்ணன் கட்டுமான தொழில் நடத்தி வருகிறார்.
இன்ஸ்டாகிராம் வாயிலாகவே இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நேரில் சந்தித்தும், இன்ஸ்டாகிராமில் உரையாடியும் பழகி வந்துள்ளனர். முன்னதாக ஹரிகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த சூழலிலேயே, ஞாயிற்றுக்கிழமை பாத்திமா, தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். இதனைக் கண்டு எரிச்சலடைந்த ஹரிகிருஷ்ணன், பாத்திமாவை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. ஹரிகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிலுக்கு அவரை திட்டிய பாத்திமா பின்னர் செல்போனை துண்டித்திருக்கிறார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன் பாத்திமாவின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரை காரில் வந்து அமருமாறு வற்புறுத்தியுள்ளார். பாத்திமாவும் அவருடன் சென்று காரில் அமர்ந்திருக்கின்றார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பாத்திமாவை ஹரிகிருஷ்ணன் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பாலியல்ரீதியாகவும் அவரை துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் அதிர்ச்சடைந்த பாத்திமா கத்தி கூச்சலிட்டிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு பாத்திமாவின் தந்தை வெளியே வந்துள்ளார். இதையறிந்த ஹரிகிருஷ்ணன் அங்கிருந்து காரில் தப்பி சென்றுவிட்டார். இது குறித்து, சேலையூர் காவல் நிலையத்தில் பாத்திமா அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹரிகிருஷ்ணன் மீது 296(b), 115(2), 74, 351(2), BNS மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

