மூதாட்டியிடம் செயின் பறித்த வழக்கில் மூன்று பேரை அசோக் நகர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தமிழ்செல்வி (வயது 63). இவரது கணவர் சின்னையா, கடந்த 2021- ஆம் ஆண்டு உடல் நலக்குறைவுக் காரணமாக காலமானார்.
இவரது மூத்த மகள் வெளிநாட்டில் கணவருடன் வசித்து வரும் நிலையில் இவர் தனது மகன் ராஜேஷ் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 14- ஆம் தேதி அன்று மூதாட்டி தமிழ்செல்வி தனது வீட்டில் இருந்து ஆட்டோவில் மாம்பலத்தில் உள்ள மகா வல்லபகணபதி திருக்கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார்.
பின்னர் தமிழ்செல்வி வீட்டருகே இறங்கி குடியிருப்புக்கு நடந்துச் சென்றுக் கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் தமிழ்செல்வி அணிந்திருந்த 9 சவரன் தங்கநகையைப் பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தமிழ்செல்வி தனது மகன் ராஜேஷுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விரைந்து வந்து தாயிடம் விசாரித்து விட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த அசோக் நகர் காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வுச் செய்தனர். அத்துடன், தப்பியோடிய கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அதைத் தொடர்ந்து, ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்கிற பர்மா சீனு (வயது 50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
கடந்த 2025- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வழிப்பறி வழக்கில் பர்மா சீனுவை பழவந்தாங்கல் காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். அதன்பிறகு மார்ச் 06- ஆம் தேதி ஜாமினில் வெளியே வந்த பர்மா சீனு, ஆட்டோவை ஓட்டி வாழலாம் என நினைத்துள்ளார். எனினும், ஆட்டோ தவணை செலுத்த முடியாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் மூதாட்டியிடம் பறித்த செயினை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் (வயது 34) என்பவரிடம் கொடுத்து அவரது வங்கிக்கணக்கின் மூலம் அடகு வைத்து ரூபாய் 5.2 லட்சம் பணத்தைப் பெற்றுள்ளார்.
சிறையில் இருந்தபோது பழக்கமான ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ரவுடி பாம்பே சத்யா என்பவரின் காதலி அனிதாவிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்ததும், அனிதா அந்த பணத்தில் 85,000 ரூபாயை வழக்கறிஞரிடம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, பர்மா சீனு, அனிதா, ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூபாய் 1.91 லட்சம் ரொக்கத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

