சர்க்கரை நோய் என்பது இன்று நம் வீட்டு உறுப்பினர்களில் ஒருவரை போல ஆகிவிட்டது. இன்றைய வாழ்க்கை முறை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சர்க்கரை நோய் பாதிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் மாத்திரை சாப்பிடுவது அல்லது இன்சுலின் போட்டுக்கொள்வது என்பதோடு நம் கடமை முடிந்துவிட்டதாக நாம் நினைக்கிறோம்.
ஆனால், சர்க்கரை நோயின் பின்னணியில் “கணையத்தில் கொழுப்பு படிதல்” (Fatty Pancreas) என்ற ஒரு புதிய சவால் மறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. ‘Diabetes Research and Clinical Practice’ என்ற சர்வதேச மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின்படி, டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 54 சதவீதத்தினருக்கு, அதாவது பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு, கணையத்தில் ஆபத்தான அளவில் கொழுப்பு படிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 6,300-க்கும் மேற்பட்டோரை உட்படுத்தி நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
என்ன செய்கிறது இந்தக் கொழுப்பு?
நமது உடலில் சர்க்கரையை சீராக வைக்க இன்சுலினை சுரக்கும் மிக முக்கியமான உறுப்பு கணையம். கல்லீரலில் கொழுப்பு படிவதை பற்றி (Fatty Liver) கேள்விப்பட்ட நமக்கு, கணையத்தில் கொழுப்பு படிவது என்பது புதிய செய்தியாக இருக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட காலம் கட்டுப்பாட்டில் இல்லாதபோது, தேவையற்ற கொழுப்பு கணைய திசுக்களுக்குள் ஊடுருவி தங்க ஆரம்பிக்கிறது.
இது காலப்போக்கில் இன்சுலின் சுரக்கும் திறனை மெல்ல மெல்ல அழித்துவிடும். இந்த நிலையை அலட்சியப்படுத்தினால் கணைய அழற்சி, ஏன் புற்றுநோய் வரை கூட கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் ஒரு முக்கிய விஷயத்தை பகிர்ந்துள்ளனர்.
அதாவது, சர்க்கரை நோயாளிகளில் பலருக்கும் தங்களுக்கு கணையத்தில் கொழுப்பு இருக்கிறது என்பதே தெரிவதில்லை. இது ஒரு “அமைதியான நோய் சுமை” என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். நாம் ஸ்கேன் செய்து பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய இந்த பாதிப்பு, இன்று உலகளவில் சர்க்கரை நோயாளிகளிடையே மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
ஏன் கணையத்தில் கொழுப்பு சேருகிறது?
இதற்கு பின்னால் பல காரணங்கள் இருந்தாலும், நமது வயிற்று பகுதியில் சேரும் ‘விசரல் ஃபேட்’ எனப்படும் உள்உறுப்புக் கொழுப்புதான் முதல் எதிரி. உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் தவறான உணவு பழக்கங்கள் இதற்கு தூண்டுகோலாக அமைகின்றன.
குறிப்பாக, கல்லீரலில் ஏற்கனவே கொழுப்பு படிந்திருப்பவர்களுக்கும், ரத்தத்தில் கொழுப்பு சத்து (Cholesterol) அதிகமாக இருப்பவர்களுக்கும் கணையத்தில் கொழுப்பு சேரும் வாய்ப்பு மிக அதிகம். ஆண்கள் மற்றும் முதியவர்களுக்கு இந்தபாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்தியா ஏன் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்?
இந்தியாவை பொறுத்தவரை நாம் ‘சர்க்கரை நோயின் தலைநகரம்’ என்று அழைக்கப்படும் சூழலில் இருக்கிறோம். ஐசிஎம்ஆர் (ICMR) தரவுகளின்படி, இந்தியாவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வளவு பெரிய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கணையத்தில் கொழுப்பு படிந்திருக்க வாய்ப்புள்ளது என்பது நாம் சாதாரணமாகக் கடந்து போக வேண்டிய விஷயம் அல்ல. ஆசியர்களிடையே இதன் தாக்கம் மேலைநாட்டினரை விடக் குறைவாக தெரிந்தாலும், நமது உணவு முறை மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் கண்டறியப்படாத பாதிப்புகள் நம்மிடையே அதிகமாக இருக்கலாம்.
தடுக்க என்ன செய்வது?
கணையத்தில் கொழுப்பு படிவதை தடுக்கவும், படிந்த கொழுப்பை குறைக்கவும் நமது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியமாகும்.
உணவு முறையில் மாற்றங்கள் செய்வது முதல் படியாகும். நார்ச்சத்து மிகுந்த மற்றும் குறைந்த கொழுப்புள்ள உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது பாரம்பரிய உணவுகளான ராகி, சோளம் போன்ற சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்திய உணவு முறையில் அதிகம் இடம்பெறும் பொரித்த உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து (மைதா) மற்றும் சர்க்கரையை தவிர்ப்பது கணையத்தில் கொழுப்பு சேர்வதை குறைத்து இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும்.
உடற்பயிற்சி என்பது வெறும் உடல் எடையைக் குறைக்க மட்டுமல்ல, உறுப்புகளை சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்கவும் உதவும். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி, யோகா அல்லது Strength Training மேற்கொள்வது அவசியம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்யும் முறையை மாற்றி, சுறுசுறுப்பாக இருப்பது வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
உடல் எடையை சரியாக பராமரிப்பது மிக முக்கியம். உங்களது தற்போதைய உடல் எடையில் 5 முதல் 10 சதவீதத்தை ஆரோக்கியமான முறையில் குறைப்பது கணையத்தில் கொழுப்பு தேங்குவதை தடுக்கும். இது கணைய அழற்சி ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். அதேபோல், மதுப்பழக்கத்தை முற்றிலுமாக தவிர்ப்பதும், இனிப்பு பானங்களுக்கு பதிலாக தண்ணீர், மோர் அல்லது மூலிகை டீ போன்றவற்றை அருந்துவதும் கணையத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க பிராணாயாமம் அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை செய்வது, தேவையற்ற கொழுப்புச் சேமிப்பை தவிர்க்க உதவும்.

