அரசியல் தலைவர்களின் படங்களை மறைக்கும் பணிக்காக சென்ற தூய்மைப் பணியாளர் ஹைட்ராலிக் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதற்கு இழப்பீடு வழங்க கோரி சக பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் கம்பம் டிடிவி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் தனியார் நிறுவனம் மூலம் கம்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நகராட்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், போஸ்டர்கள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி கம்பம் வாரச் சந்தை நுழைவுவாயில் மேற்பகுதியில் உள்ள ஒரு தலைவரின் புகைப்படத்தை மறைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் மணிகண்டனை அழைத்துள்ளனர். அப்போது அங்கு சென்ற மணிகண்டன் நகராட்சியில் தெரு விளக்கு பராமரிப்பு பணிக்காக ஹைட்ராலிக் பிளாட்பார்ம் வாகனத்தில் இருந்து பணி செய்து கொண்டிருந்த போது அவர் எதிர்பாராத விதமாக மேலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து கீழே கிடந்த அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது ஆபத்தான நிலையில் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் பணிக்கு வந்த தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லாமல் இறந்த மணிகண்டனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி இழப்பீடு வழங்கும் வரை பணிக்குச் செல்ல மாட்டோம் என்று கூறி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் மணிகண்டன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி அரசு சார்பில் வழங்கும் காலை உணவுத் திட்டத்தை அருந்தாமல் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கம்பம் நகராட்சி அலுவலகம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

