நாகப்பட்டினம் வேதாரண்யம் அருகே வளர்ப்பு நாயை அவிழ்த்துவிட்டு இரு பெண்களை கடிக்கவிட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. நாய் கடித்துக் குதறியதை கைகட்டி வேடிக்கைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது நடவடிக்கை பாயுமா?
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது பக்கத்து வீட்டில் பழனி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ராமலிங்கத்தின் இடத்தை வாங்கியே பழனி வீடு கட்டி குடியேறியுள்ளதாக கூறப்படுகிறது. நாளடைவில் இரு குடும்பத்தினர் இடையே சிறு சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே பேச்சு எதுவும் இல்லாத அளவிற்கு பகை உருவாகியுள்ளது. அத்துடன் அடிக்கடி இரு குடும்பத்தினரும் முட்டிக் கொண்டே இருந்துள்ளனர்.
அண்மையில் ராமலிங்கத்தின் மகள் பவிதா என்பவர், தனது தந்தை வீடான தோப்புத்துறை மடவிலாகத்துக்கு வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 13ஆம் தேதி தந்தை வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது, பழனி வீட்டில் வளர்த்து வரும் நாயை, அவர்கள் அவிழ்த்துவிட்டதாக கூறப்படுகிறது. முன்கேட்டு திறந்திருந்ததும் அந்த நாய் வெளியே ஓடிச் சென்று பவிதாவை கடித்துள்ளது.
அதை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் அச்சத்தில் கதறியுள்ளார். பவிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது தாயார் ஓடி வந்துள்ளார். வந்த உடனே மண்ணை அள்ளி நாய் மீது போட்டு விரட்ட முயற்சித்துள்ளார். மண்ணை அள்ளிப் போட்டதும் மூர்க்கத்தனமாக மாறிய நாய், தாய் மகள் இருவர் மீதும் பாய்ந்து கடித்துள்ளது. அதைப் பார்த்து எந்தவொரு சலனமும் கொள்ளாத பழனியின் குடும்பத்தினர், விடாமல் நாய் கடிக்கும் நோக்கில் கேட்டை இழுத்து அடைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பவிதாவின் தாயார், உருட்டுக் கட்டையை எடுத்து வந்து நாயை நையப்புடைத்துள்ளார். அதைக் கண்டு பின் வாங்காத நாய், மேலும் சீற்றத்துடன் பாய்ந்து பாய்ந்து கடித்துள்ளது. நாயின் உரிமையாளர்கள் வீட்டிற்குள் இருந்து கைகட்டி அதை வேடிக்கை பார்த்துள்ளனர். வளர்ப்பு நாயுடன், தெரு நாய்களும் சுற்றி வளைத்ததால் தாயும், மகளும் செய்வது அறியாமல் கடிபட்டு வலியால் துடித்துள்ளனர். நாய்க்கடிக்கு இடையிலும் அவர்கள் இருவரும் பழனி குடும்பத்தினரை திட்டித் திமிறியுள்ளனர்.
அப்படியும் அவர்கள் செவி சாய்க்காததால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பவிதா, இரும்புக் கம்பியை எடுத்துவந்து விரட்டி விரட்டி கடித்த நாயை கடுமையாக தாக்கினார். வலி தாங்க முடியாத நாய் இரும்புக் கேட்டுக்குள் ஏதாவது வழி கிடைக்காதா என்று முண்டியடித்தது. செல்லமாக வளர்ந்த நாயும் அடிபட்டு துடிப்பதை பழனியின் வீட்டினர் உள்ளே இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். கடைசியாக எஜமானர்களும் உதவிக்கு வர மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்த நாய், அடி வாங்கி சாவதைவிட தப்பித்து ஓடி விடலாம் என்ற எண்ணத்தில் தலைதெறிக்க ஓடியது.
பக்கத்து வீட்டு நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண்ணும், அவரது தாயாரும் வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர்கள் நாயை அவிழ்த்துவிட்டு கடிக்கவிட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகாரின்பேரில் போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நாய்கள் தொந்தரவை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாயையும், மகளையும் பக்கத்து வீட்டு நாய் பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறிய சிசிடிவி காட்சி வெளியாகி வேதாரண்யத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்தாவது ஈவு இரக்கமின்றி வளர்ப்பு நாயை ஏவி கடிக்கவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

