கண் இமைப்பது என்பது நமது உடலின் தன்னிச்சையான ஒரு செயல். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 20 முறை வரை கண்களை இமைக்கிறான். இது பார்ப்பதற்கு சாதாரண விஷயமாக தெரிந்தாலும், கண்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு.
ஒவ்வொரு முறை இமைக்கும்போதும், கண்ணீர் கண்களின் மேற்பரப்பு முழுவதும் பரவி, தூசிகளை அகற்றி, கண்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஆனால், நாம் ஒரு நிமிடம் வேண்டுமென்றே இமைக்காமல் இருந்தால் என்ன நடக்கும்? தொடக்கத்தில் இது ஒரு வேடிக்கையான விளையாட்டாக தோன்றலாம், ஆனால் சில நொடிகளிலேயே கண்கள் வறண்டு, எரிச்சல் ஏற்பட தொடங்கும்.
கணினி மற்றும் மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதால், அறியாமலேயே நமது இமைக்கும் வேகம் குறைகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
உடனடி வறட்சி மற்றும் எரிச்சல்: கண் இமைப்பதன் முதன்மை நோக்கம் கண்ணீரை விழித்திரை முழுவதும் சமமாகப் பரப்புவதாகும். இந்த கண்ணீர் படலம் கண்களுக்குப் பாதுகாப்பாகவும், கிருமிகள் அண்டாமல் தடுக்கும் அரணாகவும் இருக்கிறது.
NIH ஆய்வின்படி, நாம் இமைக்காமல் இருக்கும்போது கண்ணீர் படலம் மிக வேகமாக உடைய தொடங்குகிறது. இதனால் சில நொடிகளிலேயே கண்கள் வறண்டு, ஏதோ மணல் துகள்கள் விழுந்தது போன்ற உறுத்தல் அல்லது எரிச்சல் உணர்வு ஏற்படும். இந்த வறட்சியை சரிசெய்ய உடல் தானாகவே அதிகக் கண்ணீரைச் சுரக்க முயற்சிக்கும், இதனால் கண்கள் சிவந்து போகவும் வாய்ப்புள்ளது.
கண் சோர்வு: இமைக்காமல் கண்களை திறந்து வைத்திருப்பது, இமைகளை சுற்றியுள்ள ‘ஆர்பிகுலாரிஸ் ஆகுலி’ (orbicularis oculi) போன்ற சிறிய தசை நார்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. இந்த தசைகள் தொடர்ந்து பதற்ற நிலையில் இருப்பதால், ஒரு நிமிடத்திற்குள்ளேயே கண்களைச் சுற்றி வலி அல்லது பாரமான உணர்வு ஏற்படும்.
இன்றைய டிஜிட்டல் உலகில், கணினி திரைகளை தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் ‘டிஜிட்டல் கண் சோர்வு’ (Digital Eye Strain) மற்றும் தலைவலிக்கு இமைக்காமல் இருப்பதே முக்கியக் காரணமாகிறது. இது காலப்போக்கில் பார்வைக் குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.
மங்கலான பார்வை: கண்ணின் முன் பகுதியான கார்னியா (Cornea) தெளிவாக இருப்பதற்கு அதன் மேல் மெல்லிய கண்ணீர் படலம் இருக்க வேண்டும். இமைக்காமல் இருந்தால் இந்தப் படலம் சீரற்றதாகி, கண்ணுக்குள் நுழையும் ஒளியைச் சிதறடிக்கும்.
JAMA Network வெளியிட்டுள்ள ஆய்வின்படி, கூர்ந்து கவனிக்கும் வேலைகளின் போது இமைக்கும் விகிதம் கணிசமாகக் குறைகிறது. இதனால் பார்வை தற்காலிகமாக மங்கலாகத் தெரிவதுடன், ஒரு புள்ளியைத் தொடர்ந்து கவனிப்பதில் சிரமம் ஏற்படும். இது கண்களின் துல்லியமான பார்வைத்திறனைத் தற்காலிகமாகப் பாதிக்கிறது.
தன்னிச்சையான பாதுகாப்பு எதிர்வினை: நமது மூளை கண்களை பாதுகாக்க தானாகவே செயல்படும் திறன் கொண்டது. நீங்கள் வேண்டுமென்றே கண்களைத் திறந்து வைத்திருந்தாலும், சில நொடிகளுக்கு பிறகு மூளை இமைகளுக்கு கட்டளையிட்டு தன்னிச்சையாக இமைக்க செய்யும்.
கார்னியா காயமடையாமல் தடுக்க இந்த ‘ரிஃப்ளெக்ஸ்’ (Reflex) செயல் அவசியம். நாம் இமைக்க மறுக்கும்போது, கண்களை சுற்றியுள்ள தசைகள் துடிக்க தொடங்குவதும், கண்கள் தானாகவே சுருங்குவதும் இதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாகும். இது கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உடல் எடுக்கும் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
நீண்ட கால பாதிப்புகள்: ஒரு நிமிடம் இமைக்காமல் இருப்பது நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், திரைகளை பார்க்கும் போது தொடர்ந்து இமைக்க மறப்பது நீண்ட கால சிக்கல்களை உருவாக்கும். இது நாள்பட்ட கண் வறட்சி (Chronic Dry Eye), அதிகப்படியான கண் சோர்வு மற்றும் ஒளியைத் தாங்க முடியாத நிலை (Light Sensitivity) ஆகியவற்றை ஏற்படுத்தும்.
எனவே, வேலைக்கு இடையே அவ்வப்போது இடைவெளி எடுப்பது, அடிக்கடி கண்களை இமைப்பது மற்றும் தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது கண்களைப் பாதுகாக்க உதவும்.

