நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதச்சத்து (Protein) என்பது மிக முக்கியமானது. பருப்பு வகைகள், முட்டை, கறி என ஆரோக்கியத்திற்காக நாம் தேடி தேடி புரதத்தை உணவில் சேர்த்து கொள்கிறோம். பொதுவாக, “நிறைய புரோட்டீன் சாப்பிட்டால் உடம்பு வலுவாகும்” என்பது தான் பலரிடம் இருக்கும் பொதுவான எண்ணம். ஆனால், நம் உடலில் நடக்கும் மாற்றங்கள் வேறு.
உதாரணத்திற்கு, நம் உடலை ஒரு தொழிற்சாலை போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது, நாம் சாப்பிடும் புரதம் செரிமானமாகும் போது, ‘அம்மோனியா’ என்ற ஒரு கழிவுப் பொருள் உருவாகிறது. ஆரோக்கியமான கல்லீரல் இந்த கழிவை சுத்திகரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் மாறிப் போன உணவுப் பழக்கம், மதுப்பழக்கம் அல்லது வைரஸ் தொற்றுகளால் பலருக்கு கல்லீரல் வீக்கம் (Fatty Liver) அல்லது கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், நாம் ஆரோக்கியம் என்று நினைத்து எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான புரதச்சத்து, பாதிக்கப்பட்ட கல்லீரலுக்கு சுமையாக மாறி, அதுவே புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு உரமாகவும் மாறிவிடுகிறது என்பது தான் உண்மை. இது குறித்து அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (Rutgers) மேற்கொண்ட ஆய்வின் கிடைத்த தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரலில் அம்மோனியா தேக்கமும் புற்றுநோய் அபாயமும்!
ஆரோக்கியமான ஒருவருக்கு கல்லீரல் சரியாக வேலை செய்யும் போது, உடலில் சேரும் நச்சுப் பொருளான அம்மோனியாவை ‘யூரியா’வாக மாற்றி வெளியேற்றிவிடும். ஆனால், கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் அலற்சி (Hepatitis) இருப்பவர்களுக்கு இந்த சுத்திகரிப்பு வேலை சரியாக நடப்பதில்லை.
சமீபத்திய ஆய்வின்படி, கல்லீரலில் அம்மோனியா சரியாக வெளியேற்றப்படாமல் தேங்கும் போது, அது புற்றுநோய் கட்டிகள் வேகமாக வளர உதவுகிறது. சுத்திகரிக்கப்படாத இந்த கழிவு பொருள், புற்றுநோய் செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தாக மாறிவிடுகிறது. இதனால், சாதாரண நிலையில் வளரும் புற்றுநோய் கட்டிகளை விட, அம்மோனியா தேக்கம் உள்ள கல்லீரலில் கட்டிகள் மிக வேகமாக பரவுகின்றன என தெரிய வந்துள்ளது.
கழிவு பொருளை உணவாக்கி கொள்ளும் புற்றுநோய் செல்கள்
ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வெய்-ஷிங் ஜாங் தலைமையிலான ஆய்வுக்குழு, புற்றுநோய் செல்கள் எப்படி அம்மோனியாவை பயன்படுத்திக் கொள்கின்றன? என்பதை கண்டறிந்தது. பொதுவாக உடல் வெளியேற்ற வேண்டிய அம்மோனியாவை, புற்றுநோய் செல்கள் லாவகமாக பிடித்து கொள்கின்றன என்கிறது ஆய்வு.
புற்றுநோய் செல்கள் தங்களை பெருக்கி கொள்ளவும், டிஎன்ஏ (DNA) போன்ற மரபணுக்களை உருவாக்கவும் நைட்ரஜன் தேவைப்படுகிறது. அம்மோனியாவில் அதிகப்படியான நைட்ரஜன் இருப்பதால், இந்த கழிவையே தங்களுக்கு தேவையான ‘கட்டுமானப் பொருளாக’ புற்றுநோய் செல்கள் மாற்றி கொள்கின்றன. அதாவது, உடலுக்கு வேண்டாத குப்பையை வைத்து புற்றுநோய் செல்கள் விரிவுபடுத்துகின்றன.
எலிகளிடம் நடத்தப்பட்ட புரத உணவு கட்டுப்பாடு ஆய்வு
இந்த உண்மையை உறுதிப்படுத்த, ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் பாதிப்புள்ள எலிகளுக்கு புரதச்சத்து குறைவான உணவை கொடுத்து சோதனை செய்தனர்.
புரதச்சத்து குறைவாக கொடுக்கப்பட்ட போது, எலிகளின் உடலில் அம்மோனியா உருவாவது குறைந்தது. இதன் விளைவாக, புற்றுநோய் கட்டிகளுக்கு கிடைத்து வந்த நைட்ரஜன் சத்து தடைபட்டது. இறுதியில், புரத குறைவான உணவை உண்ட எலிகளிடம் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சி வேகம் குறைந்ததோடு, அவை நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததும் கண்டறியப்பட்டது.
இது மட்டுமல்லாமல், அம்மோனியாவை சுத்திகரிக்கும் என்சைம்களை (Enzymes) செயற்கையாக முடக்கிய போதும், உடலில் அம்மோனியா அளவு அதிகரித்து புற்றுநோய் வேகம் எடுத்தது உறுதியானது.
யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
இந்த ஆய்வு குறிப்பாக உடல் பருமன் மற்றும் தவறான உணவு முறையால் கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பவர்கள், நீண்ட கால மதுப்பழக்கத்தால் கல்லீரல் சுருக்கம் அல்லது பாதிப்பு ஏற்பட்டவர்கள், வைரஸ் தொற்றால் கல்லீரல் பலவீனமானவர்கள் உணவில் புரதச்சத்தின் அளவை மருத்துவரின் ஆலோசனையின்றி அளவுக்கு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறது.
அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?
இந்த ஆய்வு முடிவுகள் புரதச்சத்து கெட்டது என்று சொல்லவில்லை. சாதாரண ஆரோக்கியமான மனிதர்களுக்கு புரதச்சத்து தாராளமாக தேவை. அதே போல், புற்றுநோய்க்காக தீவிர சிகிச்சை எடுத்து வருபவர்கள் உடல் வலுவை பராமரிக்க புரதச்சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டியிருக்கும்.
உணவில் புரதத்தை குறைப்பது என்பது கல்லீரல் செயலிழந்த நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஒருவருக்கு எவ்வளவு புரதம் தேவை என்பதை மருத்துவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்.

