கடும் வறட்சியின் காரணமாக கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தில் உள்ள பல பறவைக் குஞ்சுகள் உயிரிழந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் பெருமைகளில் ஒன்றான கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் நாங்குநேரி அருகே உள்ளது. இந்த சரணாலயம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் வறட்சியைச் சந்தித்து வருகிறது. இதனால் சைபீரியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வந்த ஆயிரக்கணக்கான பறவைகள், குடிக்கத் தண்ணீரும் தங்குவதற்கு ஏதுவான சூழலும் இன்றி உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளன. அதுகுறித்து விளக்கமாக பாப்போம்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் சுமார் 1.29 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பறவைகள் சரணாலயம், உலகப் புகழ்பெற்ற ஒரு பறவைகள் புகலிடமாகும். ஆண்டுதோறும் டிசம்பர் முதல், ஜூன் மாதம் வரை சைபீரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து கூழைக்கடா, பூநாரை, நத்தைகொத்தி நாரை, பார்-ஹெடட் கூஸ் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான பறவைகள் இங்கு வலசை (Migration) வருவது வழக்கம்.
இங்கு வரும் பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்தை முடித்துவிட்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு தாயகம் திரும்புவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், மணிமுத்தாறு அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்கப்படாததாலும், சரணாலயத்தின் பிரதான குளம் முற்றிலும் வறண்டு பாலைவனம் போல காட்சியளிக்கிறது.
வழக்கமாக மணிமுத்தாறு அணையில் 80 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்தால், 80 அடி கால்வாய் வழியாகக் கூந்தங்குளம் குளத்திற்குத் தண்ணீர் வந்து சேரும். ஆனால் இந்த ஆண்டு அணையிலிருந்து முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நான்காவது பகுதியில் உள்ள கூந்தங்குளம் சரணாலயத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
தண்ணீர் இல்லாததால், இனப்பெருக்கத்திற்காக வந்த பறவைகள் முட்டையிட்டுப் பொரித்த குஞ்சுகளைப் பராமரிக்க முடியாமல் திணறி வருகின்றன. வேறு வழியின்றி அருகிலுள்ள வடக்கு காடன்குளம் போன்ற பகுதிகளுக்குப் பறவைகள் இடம்பெயரத் தொடங்கியுள்ளன. போதிய நீர் ஆதாரம் இல்லாததால் பல பறவைக் குஞ்சுகள் உயிரிழந்து வருவதாகக் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சமூக ஆர்வலர் வேல்முருகன், பறவைகளைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை காட்டி வருகிறார். வறண்ட நிலத்தில் இரவு நேரங்களில் காட்டுப் பூனைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பறவைக் குஞ்சுகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க அவர் இரவு பகலாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இருப்பினும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடனடியாக குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

