கோவையில் நேற்று கந்துவட்டி தொடர்ப்பாக போலீசார் அதிரடி சோதனையில் நடத்தி 1.25 கோடி பணம், சொத்து ஆவணங்கள், பாஸ்போர்ட் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சோதனை
நேற்று கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கந்துவட்டி தொடர்பாக 16 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், ஆனைமலை, மதுக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

இச்சோதனையில் கோவை மாவட்டம் திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் நடராஜன் வீட்டில் இருந்து 1.12 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல இடங்களிலும் கந்துவட்டி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
379 சொத்து ஆவணங்கள்
போலீசார் மொத்தம் 1.25 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். திருமலையாம்பாளையம் நடராஜன் உள்ளிட்ட 18 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் வீடுகளில் இருந்து கந்துவட்டி சம்மந்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புடைய 379 சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

அதில் 79 புரோ நோட்டுகள், 127 காசோலைகள், 48 ஏடிஎம் கார்டுகள், 18 வங்கி பாஸ்புத்தகங்கள், 54 கையெழுத்திடப்பட்ட வெற்று காகிதங்கள், 211 ஆர்.சி.புத்தகங்கள், 7 ஆதார் கார்டுகள், 3 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீசார் அதிர்ச்சி
சொத்து பத்திரங்கள், வாகனங்களின் ஆர்.சி புத்தகம் போன்ற ஆவணங்களை அடகு வைத்து கந்து வட்டிக்கு பணம் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது பாஸ்போர்ட், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை அடகு வைத்து கந்துவட்டிக்கு பணம் வாங்கிருப்பது போலீசாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


