பெண்களின் உடல் ஒரு அற்புதமான கடிகாரத்தை போன்றது. ஒவ்வொரு மாதமும் நிகழும் சுழற்சியில், உடல் தனக்குள்ளேயே பல மாற்றங்களை சத்தமில்லாமல் நிகழ்த்துகிறது. இதில் பலருக்கும் சவாலாக அமைவது மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள்.
குறிப்பாக தாடை மற்றும் வாய் பகுதியை சுற்றி வரும் இந்த பருக்கள், ஏதோ ஒரு தோல் வியாதி என்றோ அல்லது முகத்தைச் சரியாகப் பராமரிக்காததால் வந்த குறை என்றோ பலரும் தவறாக எண்ணுகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல.
இந்த பருக்கள் வெறும் சருமப் பிரச்சனை மட்டுமல்ல, அவை உங்கள் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் ஹார்மோன் ஓட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் ஒரு ‘அலாரம்’. மாதவிடாய் சுழற்சியின் ஒரு பகுதியாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரான் அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், உங்கள் சருமத்தின் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி இந்தப் பருக்களை உருவாக்குகின்றன. இந்தப் பருக்கள் ஏன் ஏற்படுகின்றன, அதன் பின்னணியில் உள்ள ஹார்மோன்களின் விளையாட்டு என்ன என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஹார்மோன் மாற்றங்கள்: மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் ஏற்படும் முகப்பருக்களுக்கு முக்கியக் காரணம் நம் உடலில் நிகழும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஆகும். மாதவிடாய் சுழற்சியின் இறுதி நாட்களில், ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிக்கிறது.
இந்த மாற்றம் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை (Sebaceous glands) அதிகப்படியாகத் தூண்டி, எண்ணெயைச் சுரக்கச் செய்கிறது. அதிகப்படியான எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஒன்றாகச் சேர்ந்து துளைகளை அடைத்துக்கொள்வதால், அந்தப் பருக்கள் உருவாகின்றன என Perimenstrual Flare of Adult Acne என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உங்கள் சுகாதாரக் குறைபாட்டால் வருவது அல்ல, உங்கள் உடலின் உள் மாற்றத்தால் விளைவது.
தாடை மற்றும் கன்னங்களில் ஏன் அதிகம்? சாதாரண முகப்பருக்களுக்கும், மாதவிடாய்க்கு முன் வரும் ‘ஹார்மோன் முகப்பருக்களுக்கும்’ வித்தியாசம் உண்டு. இவை மிகவும் ஆழமானவை, தொட்டால் வலிக்கக்கூடியவை மற்றும் குணமாவதற்கு அதிக காலம் எடுப்பவை.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஹார்மோன் உணர்திறன் காரணமாக இந்த வகை பருக்கள் பெரும்பாலும் தாடை (Jawline), கன்னங்களின் கீழ் பகுதி மற்றும் வாய் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே தோன்றும். ஹார்மோன் மாறுபாடுகளுக்கு இந்த இடத்திலுள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக எதிர்வினையாற்றுவதே இதற்கு காரணம். இது உங்கள் உடலின் ஹார்மோன் சமநிலையை வெளிப்படுத்தும் ஒரு அறிகுறியாகும்.
ஆண்ட்ரோஜன் ஹார்மோன்களின் தாக்கம்: ஆண்ட்ரோஜன்கள் பொதுவாக ‘ஆண் ஹார்மோன்கள்’ என்று அழைக்கப்பட்டாலும், அவை பெண்களின் உடலிலும் உள்ளன. மாதவிடாய்க்கு முந்தைய காலத்தில் இவை அதிக சுறுசுறுப்படைகின்றன. இந்த ஹார்மோன்கள் எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, சருமத்தை அதிக எண்ணெய் பசையுள்ளதாக மாற்றுகின்றன.
நீங்கள் வழக்கமான சருமப் பராமரிப்பைப் பின்பற்றினாலும், உங்கள் உடலின் உட்புறச் சூழல் மாறுவதால் முகப்பருக்கள் தவிர்க்க முடியாமல் போகின்றன. உங்கள் சருமத்தின் ரசாயனத் தன்மையே இந்தச் சமயத்தில் மாறத் தொடங்குவதுதான் பருக்களுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறது.
உடல் வீக்கம் மற்றும் எதிர்வினை: ஆய்வுகளின் படி, மாதவிடாய் காலத்தில் உடலில் ஒட்டுமொத்தமாக வீக்கம் (Inflammation) அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதனால் சருமம் மிகவும் உணர்திறன் உடையதாக மாறுகிறது. ஒரு சிறிய தழும்பு கூட இந்தச் சமயத்தில் மிகவும் சிவப்பாகவும், வீக்கமாகவும் தோன்றுவதற்கு இதுவே காரணம்.
உங்கள் உடல் இக்காலத்தில் எதற்கும் எளிதில் எதிர்வினையாற்றும் நிலையில் இருப்பதால், சிறிய பாதிப்புகள் கூட பெரிய முகப்பருக்களாக உருவெடுக்கின்றன. உடலின் இந்த அழற்சித் தன்மை (Inflammatory response) சருமத்தின் மென்மையைப் பாதித்து, சிவந்த தோற்றத்தை உருவாக்குகிறது.
வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள்: மாதவிடாய்க்கு முன்னால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள் மற்றும் உணவு க்ரேவிங்ஸும் இதற்கு காரணம். PMS காலத்தில் நாம் அதிக இனிப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதால், உடலில் இன்சுலின் அளவு அதிகரித்து வீக்கத்தைத் தூண்டுகிறது. சரியான தூக்கமின்மை, உடற்பயிற்சியைத் தவிர்ப்பது போன்ற காரணங்களும் சருமப் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன.
தடுக்க என்ன செய்வது? முகப்பருக்களைக் குறைக்க மென்மையான சுத்தப்படுத்திகளை (Gentle cleansers) பயன்படுத்த வேண்டும். சாலிசிலிக் அமிலம் அல்லது பென்சாயில் பெராக்சைடு கலந்த கிரீம்கள் ஓரளவுக்கு உதவும். முக்கியமான விஷயம் என்னவென்றால், முகத்தை அடிக்கடி கழுவுவதோ அல்லது பலவிதமான ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துவதோ சருமத்தின் பாதுகாப்பு அடுக்கைச் சிதைத்துவிடும்.
சில நேரங்களில், எதையும் செய்யாமல் சருமத்தை அதன் போக்கில் விடுவதே சிறந்த பராமரிப்பாக அமையும். பருக்களைக் கிள்ளுவதோ அல்லது அழுத்துவதோ தழும்புகளை நிரந்தரமாக்கிவிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

