தமிழ்நாடு

பேருந்தில் பேனிக் பட்டன் அறிமுகம்.. அதிரடி காட்டும் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்!

தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக எஸ்.எஸ் சிவசங்கர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த இவர் இப்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

மாற்றத்திற்கான காரணம்

முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருப்பவர் ராஜேந்திரன். இவரின் சமூகத்தின் பெயரை சொல்லி திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் கூறப்பட்டது. ஏற்கனவே போக்குவரத்து துறையில் லஞ்ச புகார் அதிகளவில் இருந்து வந்த நிலையில், போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

முன்னதாக, போக்குவரத்துத் துறையின் துணை ஆணையர் நடராஜன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் ரெய்டும் நடத்தப்பட்டது. எழிலகத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் பல லட்சம் பணம் கட்டு கட்டாக மீட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அதிர்ப்தி அடைந்த தலைமை, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்துள்ளது.

எஸ்.எஸ் சிவசங்கர் நியமனம்

போக்குவரத்துத்துறையின் புதிய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ்.எஸ் சிவசங்கர் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தி கொடுப்பது. படுக்கைவசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம் இல்லா அரசு பேருந்துகளில் முன்பு பெண்களுக்கு என்று தனியாக படுக்கை கிடையாது. தனியார் பேருந்துகளில் டிக்கெட் புக் செய்யும் போது பெண்களுக்கு என்று தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அரசு பேருந்துகளில் இந்த வசதி இல்லாமல் இருந்தது. தற்போது அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு தனியாக படுக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சீட் எண் 1 மற்றும் 4 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன.

நஷ்டத்தில் இயக்கம் போக்குவரத்து துறையை கொரோனா காலம் முடிந்துவிட்டதால் எப்படி லாபத்திற்கு கொண்டு செல்வது என்றும் ஆலோசனை செய்து வருகிறாராம் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர். மேலும்,போக்குவரத்து துறையில் என்ன பிரச்சனை, லஞ்ச புகார் வந்தது எப்படி, அதிகாரிகள் யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்று துறை ரீதியாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறாராம். அதோடு நான் இருக்கும் போது இப்படி புகார்கள் எதுவும் வர கூடாது. எல்லாம் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம்.

பேனிக் பட்டன்

தமிழ்நாட்டில் முதல் முறையாக அரசு பேருந்துகளில் பேனிக் பட்டன் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. முதல் கட்ட முயற்சியாக சென்னையில் இருக்கும் மாநகர பேருந்துகளில் இந்த பட்டன் அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்தில் ஒரு பிரச்சனை என்றால் இந்த பட்டனை அழுத்தினால், உடனே இந்த தகவல் பல்லவன் சாலையில் உள்ள MTC தலைமையகத்திற்கு செல்லும்.

பேருந்தில் இருக்கும் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் மூலம் பேருந்தில் என்ன நடக்கிறது? பேருந்து எங்கே இருக்கிறது? என்று கண்டுபிடிக்கப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் இந்த பேனிக் பட்டன் மூலம் எளிதாக புகார்களை தெரிவிக்க முடியும். பெண்களின் பாதுகாப்பு கருதி பேனிக் பட்டன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . போக்குவரத்து துறையின் அமைச்சராக ராஜகண்ணப்பன் இருந்த போதே இதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குவியும் பாராட்டு

அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் வந்ததும் பணிகள் வேகமாக முடிக்கப்பட்டு சென்னையில் பேனிக் பட்டன் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் மாநகராட்சி பஸ்களில் மொத்தம் 510 பஸ்களில் முதல் கட்டமாக இந்த வசதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. நிர்பயா கார்ப்பஸ் நிதியிலிருந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவர் வெளியிட்ட இரண்டு அறிவிப்புகளும் பெண்கள் தொடர்பானது என்பதால் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

Related posts