குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார்.
இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.
ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்ததிற்கு மாற்றப்பட்டது.
இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது.
அப்போது குடியரசுத் தலைவர் வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து குடியரசுத் தலைவர் இறங்கிவந்தார். அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன்பிறகு அங்கிருந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.
சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார்.
பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய குடியரசுத் தலைவர் , சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை குடியரசுத் தலைவர் சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக குடியரசுத் தலைவர்க்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
சபரிமலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்புகிறார்.
குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குடியரசுத் தலைவர் வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

