காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ள நிலையில் முக்கொம்பு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் மேட்டூா் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடா்ந்து பருவமழை பெய்து வருவதாலும் மேட்டூா் அணை முழுக்கொள்ளளவில் இருப்பதாலும் அணைக்கு வரும் நீா்வரத்தைப் பொருத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே காவிரி மற்றும் கொள்ளிடக் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் சலவைத் தொழிலாளா்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கால்நடைகளை ஓட்டிச்செல்லவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

