திருச்சி மாவட்டம் பீமா நகர் கீழத் தெருவை சேர்ந்த தாமரைச்செல்வன் வயது 27. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.
இவர் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திருச்சி பீமா நகர் பழைய தபால் நிலைய சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்திசையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தாமரை செல்வன் இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளனர்.
பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது நான்கு பேரும் பயங்கர ஆயுதங்களை கையில் வைத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உயிர் பயத்தில் அப்பகுதியில் அலறியடி ஓடியுள்ளார்.
காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரை செல்வன் தில்லை நகரில் பணிபுரியும் காவலர் செல்வராஜ் வீடு திறந்து இருந்ததால் அந்த வீட்டிற்குள் நுழைந்து கிரைண்டர் பக்கத்தில் போய் ஒளிந்து கொண்டுள்ளார்.
ஆனாலும் அந்த கும்பல் விடாமல் வீட்டுக்குள் நுழைந்து எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் காவலர் குடும்பத்தின் கண்முன்னே தாமரை செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட காவலர் குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டுள்ளனர்.
இதனை சக காவலர்கள் கல்லால் கொலையாளிகளை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கையில் ஆயுதங்கள் இருந்ததால் அனைவரும் தூரத்தில் இருந்தே தாக்கியுள்ளனர்.
இதில் ஒருவர் பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாமரை செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த CCTV காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
திருச்சி பட்டப்பகலில் காவலர் குடியிருப்புக்குள் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

