உத்தரபிரதேசத்தில் மாடு திருடியதாக கைது செய்த வாலிபருக்கு, போலீசார் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாடு கடத்தல்
உத்தரபிரதேசத்தில் தினக்கூலித் தொழிலாளியாக ரெஹான் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 20 வயதாகிறது. கடந்த மே 2ம் தேதி வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது ரெஹான் காவல்துறையினரால் கைது செய்து அழைத்து செல்லப்பட்டார். அவரை மாடு கடத்தல் கும்பலுக்கு உதவியதாக கூறி போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.
போலீசார் சித்திரவதை
விசாரணைக்கு அழைத்து சென்ற ரெஹானை காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். கொடூரமாக அடித்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணைக்குபின் ரெஹான் பலத்த காயம் அடைந்தார். அவரால் பேசவோ, நடக்கவோ கூட முடியவில்லை. மேலும், ரெஹானிடம் காவல்துறையினர் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பு
காவல்துறையினர் அவருக்கு மின்சாரம் பாய்ச்சுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரது மைத்துனர், ‘ரெஹானை அடிப்பதற்கு காவல்துறையினர் ஒரு குச்சியைப் பயன்படுத்தியதால் அவரது அந்தரங்க பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.
லஞ்சம் வேண்டும்
ரெஹான் பல மணி நேரமாக போலீஸ் காவலில் இருந்திருக்கிறார். வாலிபரை விடுவிக்க கோரி அவரது உறவினர்கள் காவல் துறையினரிடம் கேட்டுள்ளனர். அதற்கு ரெஹானை விடுவிக்க போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
100 ரூபாய் நோட்டு
இதன்பெயரில் 5,000 ரூபாய் கொடுத்து அவரை போலீசாரிடம் இருந்து மீட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அதில் ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து அவரது சிகிச்சைக்காக போலீசார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
முதல் தகவல் அறிக்கை
இதனால் இந்த வழக்கை விசாரிக்க வந்த நகர காவல்துறையின் மூத்த அதிகாரி பிரவீன் சிங் சவுகான் இதில் தொடர்புடைய போலீசார்கள் 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைப்பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
காவல்துறையினரின் இந்த தொடர் கொடூர செயலை பலரும் கண்டித்து வருகிறார்கள்.