ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக, பலரும் இப்போது இயற்கை பானங்களை நோக்கி திரும்புகின்றனர். அதில் மிக முக்கியமானது ‘ஏபிசி ஜூஸ்’.
பொதுவாக நாம் நெல்லிக்காய் (ஆம்லா), பீட்ரூட், கேரட் ஆகியவற்றை அப்படியே பச்சையாக அரைத்து, அதன் சாற்றை மட்டும் வடிகட்டிக் குடிப்போம். ஆனால், இப்படி செய்வதால் அதில் உள்ள முக்கியமான நார்ச்சத்துக்கள் வீணாகிவிடுகின்றன. வெறும் சர்க்கரைச் சத்து கலந்த நீரை மட்டுமே நாம் குடிக்கிறோம் என்பது தான் உண்மை.
இதற்கு மாற்றாக, இந்த மூன்றையும் லேசாக அவித்து (Steam), வடிகட்டாமல் அப்படியே குடிப்பது ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இது வெறும் பானமாக மட்டுமல்லாமல், நம் உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த சிறிய மாற்றம் நம் அன்றாட வாழ்வில் எவ்வளவு பெரிய நன்மைகளைத் தரும் என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.
ஏன் அவித்து ஜூஸ் போட வேண்டும்? பொதுவாக காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது சிலருக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படலாம். குறிப்பாக பீட்ரூட் மற்றும் கேரட்டை அவிக்கும்போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இன்னும் எளிதாக நம் உடலில் உறிஞ்சப்படும் நிலைக்கு மாறுகின்றன.
அவிப்பது என்றால் தண்ணீரில் போட்டு வேகவைப்பது அல்ல, ஆவியில் வேகவைப்பது (Steaming). இப்படிச் செய்வதால் காய்கறிகளின் நிறமும் சத்தும் மாறாமல் இருக்கும். மேலும், இப்படி மென்மையான பிறகு அரைக்கும்போது, ஜூஸை வடிகட்ட வேண்டிய அவசியம் இருக்காது. தோலோடு சேர்த்து அப்படியே குடிக்கும்போது முழுமையான நார்ச்சத்து (Fiber) உடலுக்குக் கிடைக்கிறது.
அதெல்லாம் சரி. இதை எப்படி தயார் செய்வது என கேட்கிறீர்களா? இதோ உங்களுக்கான செய்முறை.
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் (ஆம்லா) – 1
பீட்ரூட் – பாதியளவு
கேரட் – 1
செய்முறை:
முதலில் கேரட், பீட்ரூட் மற்றும் நெல்லிக்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கி ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வேகவைக்கவும். காய்கறிகள் ஆறிய பிறகு, மிக்சியில் போட்டு நன்கு அரைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். முக்கியமாக, இதை வடிகட்டக் கூடாது. அப்படியே அடர்த்தியான பானமாக குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் சேர்ப்பதன் ரகசியம்: ஏபிசி ஜூஸில் ஆப்பிள் சேர்ப்பார்கள். ஆனால், அதற்கு பதிலாக ஆம்லா சேர்ப்பது சத்துக்களை உடல் வேகமாக உறிஞ்ச உதவும். குறிப்பாக, நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, மற்ற காய்கறிகளில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதாவது பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து உங்கள் ரத்தத்தில் சேர வேண்டும் என்றால், அதற்கு வைட்டமின் சி அவசியம்.
உடல் எடையும் செரிமானமும்: இந்த ஜூஸை வடிகட்டாமல் குடிப்பதால், இதிலுள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் தேவையற்ற தின்பண்டங்கள் சாப்பிடுவது குறையும், உடல் எடை குறைய இது ஒரு சிறந்த வழியாகும்.
அவிக்கப்பட்ட காய்கறிகள் என்பதால் குடல் புண் (Ulcer) இருப்பவர்களுக்கும் இது எரிச்சலை ஏற்படுத்தாது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நார்ச்சத்து குடலைச் சுத்தப்படுத்தி, கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவும்.
சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம்: நாம் எதார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கருவளையங்களுக்குக் காரணம் ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் தான். இந்த ஜூஸை தொடர்ந்து ஒரு 48 நாட்கள் குடித்து வந்தால், சருமத்தில் ஒரு இயற்கை பொலிவு உண்டாவதை உணர முடியும் என்கிறது ஆய்வு. நெல்லிக்காயும் கேரட்டும் கண்களின் ஒளிக்கும், கூந்தல் உதிர்வைக் குறைப்பதற்கும் பேருதவி புரிகின்றன.
எப்போது குடித்தால் சிறப்பு? இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது தான் அதிக பலனைத் தரும். குடித்த பிறகு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு டீ, காபி அல்லது உணவைத் தவிர்க்கவும். ப்ரிட்ஜில் வைத்து பருகாமல், ஃப்ரெஸ்ஸாக தயாரித்து குடிக்க வேண்டும்.

