சென்னை வடபழனியில் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை உயிரை மாய்த்துக் கொண்டார். தந்தை இறந்த துக்கம் தாளாமல் மகளும் விபரீத முடிவை எடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வடபழனி கங்கையம்மன் கோவில் பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (57). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் பிருந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அம்பத்தூரில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் பாக்கியா(30) திருமணம் ஆகாமல் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இளைய மகள் பாக்கியாவுக்கு 30 வயது ஆகியும் திருமணம் ஆகாததால் தந்தை கிருஷ்ணகுமார் நீண்ட நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற கிருஷ்ணகுமார், நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் மனைவியும், மகளும் அவரை பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் தாயும் மகளும் சோகத்துடன் வீட்டிற்கு திரும்பினர்.
மறுநாள் இரவு, அதாவது 8 ஆம் தேதி கிருஷ்ணகுமாரின் மனைவி வீட்டிற்கு பின்னால் சென்று பார்த்தபோது அங்குள்ள பாழடைந்த கிணற்றின் மீது கிருஷ்ணகுமாரின் செல்போன் இருப்பதை கண்டு தன் மகளிடம் தெரிவித்துள்ளார்.
உடனே மகள் பாக்கியா ஓடிவந்து பார்த்த போது கிணற்றில் தந்தை உடல் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அம்மாவை வீட்டிற்குள் அழைத்து சென்று அவரை அறையில் வைத்து பூட்டி விட்டு சமையலறையில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
பின்னர் பாக்கியாவின் தாய், தனது மூத்த மகள் பிருந்தாவுக்கு போன் செய்து நடந்தவற்றை கூற, பிருந்தா தன் கணவர் வம்சியுடன் தாயார் வீட்டிற்கு வந்து அறையை திறந்து அம்மாவை மீட்டுள்ளார். பின்னர் பாக்கியாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர், பிருந்தாவின் கணவர் வம்சி, காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த வடபழனி போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து கிருஷ்ணகுமார் உடலை மீட்டனர். பின்னர் தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரன் உடல்களையும் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், மகளுக்கு 30 வயது ஆகியும் திருமணம் செய்து வைக்க முடியாத விரக்தியில் தந்தை விபரீத முடிவை எடுத்ததும், தந்தை இறந்த துக்கம் தாளாமல் மகளும் உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது.

