திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரை அரிவாளால் வெட்டிய கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள உதய மார்த்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 70). இவர் நேற்று (மார்ச் 08) மாலை தாமிரபரணி ஆற்றின் கரையில் குளித்துக் கொண்டிருந்தார். மறுகரையில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் எப்படி எங்கள் பகுதியில் வந்து குளிக்கலாம் என்று கூறி அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும் இளைஞர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு விரட்டியுள்ளனர். இதைப் பார்த்த முதியவர் முருகன் அவர்களைத் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. பின்னர் ஊருக்குள் சென்று தெருவோரம் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை கிழித்தெறிந்து அந்த கும்பல் அராஜகத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சேரன்மகாதேவி காவல் துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் முருகனை வெட்டியது 3 பேர் கொண்ட கும்பல் என்பதும், அவர்கள் அனைவரும் 18 வயதை நிரம்பாத சிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
காயமடைந்த முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பது குறித்து அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
மேலும், முருகன் திட்டமிட்டு அரிவாளால் வெட்டப்பட்டாரா? (அல்லது) வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி லருகின்றனர்.

