127 திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கில்லாடி திருடன் ஏழே நாட்களில் திருவாரூர் போலீசாரிடம் வசமாக சிக்கினார்.
திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட பனகல் சாலையில் ஹாஜி முகமது (54) என்பவர் ஹாஜி சூப்பர் மார்க்கெட் என்கிற பெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28 ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு மறுநாள் காலை வழக்கம்போல் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது, சூப்பர் மார்க்கெட்டின் ஷட்டர் திறக்கப்பட்டு கல்லாப்பெட்டியில் இருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் திருடு போய் இருந்ததை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு மர்ம நபர் மங்கி குல்லா அணிந்து கொண்டு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. மேலும் கடையின் வெளிப்பக்கம் இருந்த சிசிடிவி கேமராவை வேறு பக்கம் திருப்பி வைத்து கடைக்குள் சென்று அவர் பணத்தை திருடியதும் சிசிடிவி காட்சிகளில் அம்பலமானது.
கைரேகை நிபுணர், மோப்பநாய் உதவியுடன் போலீசார் மர்ம நபர் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் திருவாரூர் தாலுகா உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டில் பதிவான சிசிடிவி காட்சி மற்றும் திருவாரூர் நகர் பகுதியில் பதிவான மற்ற சிசிடிவி காட்சிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் பதிவான சிசிடிவி காட்சிகள் என பல சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது ஒரு இடத்தில் இவர் கண் வரை மறைக்கும் பனிக் குல்லா அணிந்திருந்த நிலையில் அவரது மூக்கு மற்றும் தாடை பகுதியை வைத்து தனிப்படையினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள குற்றப்பிரிவிற்கு இந்த புகைப்படத்தை அனுப்பினர்.
அப்போது ஏற்கனவே அவர்களிடம் இருந்த புகைப்படத்துடன் இந்த புகைப்படம் பொருந்தி உள்ளது. இதனையடுத்து அந்த புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில் திருவாரூர் ரயில் நிலையத்தில் அந்த நபர் இருந்ததை கண்டு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவரைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுவரை தமிழக முழுவதும் கடந்த 1993- ல் இருந்து இவர் மீது சென்னை, மதுரை, கரூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 127 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தாலும் சிவகங்கை மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் வசித்து வரும் காளிதாஸ் (59) என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இவர் காவலாளி உடையான காக்கி பேண்ட் – சட்டை அணிந்து சென்று திருடுவதையும் யாரேனும் வந்தால் வாட்ச்மேன் போல் நின்று விட்டு மீண்டும் திருட்டில் ஈடுபடுவதையும் உடைக்கும் பூட்டை கையோடு எடுத்துச் செல்வதையும் தனது வழக்கமாகக் கொண்டுள்ளதும் தெரியவந்தது.
மேலும் திருடிய பணத்தில் இவர் பெண்களுடன் தினந்தோறும் உல்லாசமாக இருந்து வருவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பதும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை இவர் திருட்டு வழக்குகளில் காவல்துறையிடம் அதிகம் பிடிபட்டதில்லை என்பதும் இவர் செல்ஃபோன் ஏதும் பயன்படுத்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவாரூர் ஹாஜி சூப்பர் மார்க்கெட்டில் காக்கி சட்டை அணிந்து 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை இவர் திருடியதாகவும் அந்த பணத்தை உல்லாசமாக செலவழித்ததாகவும் போலீஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இதனையடுத்து நகர காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகப்பட்டினம் சிறையில் அடைத்தனர்.

