பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் சினிமா துறையில் அடியெடுத்து வைக்கிறார் எம்.எஸ்.தோனி.
தல தோனி
பிரபல கிரிக்கெட் வீரரும் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் எம்.எஸ்.தோனி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது ஐபில் பேட்டியில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமாவில் என்ட்ரி
சென்னை மீது எப்போதுமே தனி அன்பு வைத்திருப்பவர் எம்.எஸ்.தோனி. இவருக்கு சினிமா மீதும் பெரும் மரியாதை இருக்கிறது. சமீபத்தில் கூட நடிகர் விஜயை படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சந்தித்து வந்த இவர். தற்போது சினிமாவில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அந்த நிறுவனத்தை நடிகர் ரஜினியின் உதவியாளராக இருந்து வந்த சஞ்சய் கவனித்து கொள்ளப்போகிறார். முதலில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளனர். இதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் உதவியாளர்
நடிகர் ரஜினியின் முன்னாள் உதவியாளராக இருந்தவர் சஞ்சய். ரஜினியின் மூன்று உதவியாளர்களில் மிக முக்கியமானவர் இவர். ரஜினியைத் தொடர்புகொண்டு பேச நினைக்கும் அனைவரும் சஞ்சய் மூலமாக தான் பேச முடியும். ரஜினி நடித்த பேட்ட, தர்பார் போன்ற திரைப்படங்களில் சில காட்சிகளில் நடித்திருப்பார் சஞ்சய். இந்நிலையில் இவர்தான் தற்போது தோனி தொடங்கி இருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கதாநாயகி
சமீபத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. இதனையடுத்து அவர் சிரஞ்சீவியுடன் தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். பின்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், பல படங்களில் நடிக்கவும் கால் ஷீட் கொடுத்துள்ளார் நயன்தாரா. அந்த படங்களின் பணிகளை முடித்த பிறகு எம்.எஸ்.தோனி தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
