கோவை மாநகராட்சி பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவு சாப்பிட்ட 44 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு இன்று மதியம் பள்ளியில் உணவு வழங்கப்பட்டது. அங்கு உணவருந்திய சில மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட 44 மாணவ, மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவரை மட்டும் பெற்றோர் அழைத்துச் சென்ற நிலையில், தற்போது 43 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மேயர் ரங்கநாயகி ஆகியோரும் அரசு மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளின் உடல்நலம் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், “மதிய உணவில் பல்லி விழுந்தது தெரிந்தவுடன் உணவருந்துவது உடனடியாக தடுக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்தவுடன் 5 மருத்துவர்களை அனுப்பி மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது, கோவை அரசு மருத்துவமனையில், 30 மாணவர்களும் 13 மாணவிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம். பெற்றோரும் மாணவர்களும் விரும்பினால், முழுமையாக குணமடைந்த பிறகு அவர்கள் வீடு திரும்பலாம். உணவில் பல்லி கிடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் விவரங்கள் தெரியவரும். அந்தப் பள்ளியில் அரசு சார்பில் தான் உணவு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இதுகுறித்து கண்காணிக்க அறிவுறுத்தப்படும்” என தெரிவித்தார்.
முன்னதாக, மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் பள்ளி வளாகம் முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பணிகளில் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

