கிழக்கிலும் மேற்கிலும் வங்கக்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு நில அமைவிடம், பண்டைத் தமிழகம் கடல்கடந்த வாணிகத்தில் ஈடுபட உதவியிருக்கிறது.
கீழ்த்திசையில் சீனா மற்றும் தெற்காசிய நாட்டின் வணிகர்கள் நடுவில் இருந்த இந்தியாவைத் தாண்டி மேற்கில் அதிகம் செல்லவில்லை.
அவ்வாறே பண்டையத் தமிழர்கள் ‘யவனர்கள்’ என்று பொதுவாகக் குறிப்பிட்ட மேற்குலக பண்டைய அராபியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், எகிப்தியர்களும் இந்தியாவைக் கடந்து சென்று கீழ்த்திசை நாடுகளுடன் கடல்வணிகம் செய்வதில் அதிக அக்கறை செலுத்தவில்லை.

மேற்கே அக்காலத்தில் அறியப்பட்டிருந்த மேலைநாடுகளின் மத்திய தரைக்கடல் முதல் கிழக்கே சீனாவின் தென்சீனக் கடலுக்கும் இடைப்பட்ட கடல்வழி வணிகவழியாக இருந்தது.
கிழக்கிலும் மேற்கிலும் என இருதிசையிலும் உள்ள நாடுகளுடன் கடல்வணிகம் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது தமிழகத்தின் இருப்பிட அமைப்பு.
கடல்வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நாடுகள் மிகுந்த வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது பண்டையத் தமிழகத்தின் நிலை.
பருவகாலங்களில் மாறிவரும் காற்றின் திசைக்கேற்ப பயணங்களை மேற்கொள்வதைப் பழந்தமிழர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அதனால் எந்தநாட்டு வணிகராக இருந்தாலும் நாடு திரும்ப ஏற்ற காற்றின் திசைக்காக அயல்நாடுகளில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு அங்கு பலகாலம் வாழும் நிலையும் அன்று இருந்தது.

தனியே குழுக்களாக வணிகர்கள் தங்கள் குடியிருப்புகளில் வாழ்ந்தாலும் அவர்களால் பண்பாட்டு, சமயத் தாக்கங்களும் ஏற்படுவதும் நிகழ்ந்தது.
ஏற்றுமதியில் முன்னோடியாக திகழ்ந்த தமிழர்கள் :
அயல்நாடுகளில் தங்கள் வழிபாட்டு இடங்களையும் கட்டுவித்துக் கொண்டனர். அயல்நாட்டு அரசுகளும் அதற்கு உதவிகள் செய்துள்ளன.
ஏற்றுமதியில் விலையுர்ந்த கற்களையும், முத்துக்களையும், பட்டாடைகளையும், மஸ்லீன் துணிகளையும், ஆபரணங்களையும், வாசனைப் பொருட்களையும் ஏற்றுமதி செய்தது தமிழகம்.
இறக்குமதியில் விலை குறைந்த பொருட்களை கொள்முதல் செய்ததால் பண்டமாற்று வணிகத்தையும் மீறி வெள்ளி தங்க நாணயங்களைக் கொடுத்து ஈடுகட்ட வேண்டிய நிலைக்கு ரோம் போன்ற நாடுகள் உள்ளாயின.

இதனால் அந்த நாட்டு மக்களின் ஆடம்பர வாழ்க்கையும் அரசளவில் கண்டனம் செய்யப்பட்டு தங்கம் அதிக அளவில் தமிழகம் வருவதைக் கட்டுப்படுத்த ரோம் மன்னர் வெஸ்பாசியன் (Roman Emperor Vespasian) சட்டங்களும் இயற்ற நேரிட்டது.
பிளினி (Pliny the Elder) தனது ‘நேச்சுரலிஸ் ஹிஸ்டோரியா(Naturalis Historia/The Natural History)’ நூல் குறிப்பில் இந்தியாவைத் தங்கம் வெள்ளி போன்ற ‘அரிய உலோகங்களின் தொட்டி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு முழுவதும் இருந்த இந்தநிலை இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சிக்குப் பிறகே மாறியது.
தமிழக மன்னர்களுக்குள் தொடர்ந்து பல போர்கள் நடைபெற்றாலும் அவர்கள் வணிகர்களின் வணிகத்தைக் கட்டுப்படுத்தும் நிலையை மேற்கொள்ளவில்லை என்பதால் எந்த அரசு தோன்றினாலும் வீழ்ந்தாலும் வர்த்தகம் மட்டும் இடையூறின்றியே தொடர்ந்துள்ளது.
இரண்டாம் நரசிம்ம பல்லவன், ராஜராஜ சோழன் , ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் போன்ற வேந்தர்களும் சீன அரசவைக்குத் தூதுவர்களை அனுப்பி வணிக உறவை மேம்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளார்கள்.

இவையணைத்துக்கும் தமிழகத்தில் கிடைக்கும் தடயங்கள் உதவியுடனும், அயல்நாட்டவர் எழுதியிருக்கும் குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
அப்பொழுது சங்க இலக்கியங்களில் புலவர்கள் எழுதிய பாடல்களில் கிடைக்கும் குறிப்புகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகவே இருக்கின்றன.
மொழியின் அடிப்படையில் ஓரிடமாகவும் ஓரினமாகவும் அறியப்படும் தமிழகப் பகுதி பண்டைக்காலம் முதற்கொண்டு தொடர்ந்து இருந்துள்ளது .
இடைவிடாது மூவேந்தர்களுக்குள்ளும், குறுநில வேளிர் மன்னர்களுக்கு இடையிலும் ஏற்பட்ட பல போர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும், நிலையான பேரரசு ஒன்று என்ற தன்மையற்று இருந்தாலும்கூட தமிழகத்தின் வணிகம் அதனால் பாதிக்கப்படவில்லை.

எனவே கடல்வழி வணிகமும் உள்நாட்டு வணிகமும் செழித்து வளர்ந்திருந்த நிலைக்கு வலிமையான நிலையான ஒரு அரசு தேவையில்லை என்பது தெரிகிறது.
கடுமையான வரிகளும், கட்டுப்பாடுகளும், பிறவழிகளில் அரசுகளின் குறுக்கீடுகளும் இல்லாத நிலையே பழந்தமிழகத்தில் கடல்வழி வணிகம் சிறந்திருக்கக் காரணமாக இருந்துள்ளது.

