மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறித்தியுள்ளது.
உபரி நீர் திறப்பு
கடந்த ஒரு வார காலமாக தென் மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூரில் 2 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். மேலும், ஆபத்தான முறையில் குளிப்பதும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை அருகே உள்ள பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, உள்பட காவிரி கரையோர பகுதிகளுக்கு பொது மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் ,மேட்டூர் நகராட்சி மார்க்கெட் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் மக்களை தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

