குன்னூரில் கருப்பு கேரட் சாகுபடி சோதனை முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்கா, சுற்றுலா மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சிக்கு பெயர் பெற்றதாக திகழ்கிறது. இங்கு தோட்டக்கலைத் துறை சார்பில் முதன்முறையாக கருப்பு கேரட் சாகுபடி சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த சாகுபடி முயற்சிக்காக டெல்லியில் இருந்து சிறப்பு விதைகள் வரவழைக்கப்பட்டு, குன்னூரின் குளிர்ச்சியான காலநிலைக்கு ஏற்றவாறு நர்சரியில் பராமரிக்கப்பட்டது. சுமார் 3 முதல் 4 மாதங்களில் (90–100 நாட்கள்) வளர்ச்சி அடைந்து, தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, முதன்முறையாக கருப்பு கேரட் சாகுபடி சோதனை முயற்சி வெற்றி அடைந்ததாக தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட கருப்பு கேரடின் தரமும் அளவும் சிறப்பாக உள்ளதாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கருப்பு கேரட், வடமாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சிறப்பு வகை கேரட் ஆகும். குறிப்பாக, இது பாரம்பரிய உணவுகள், இனிப்புகள் மற்றும் ‘கஞ்சி’ போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
இது தனது தனித்துவமான கருப்பு நிறத்தால் மட்டுமல்லாமல், அதிக மருத்துவக் குணங்களாலும் பிரபலமானதாகும். இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் K மற்றும் அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidants) நிறைந்துள்ளன.இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதன் சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் செல்களை பாதுகாக்கவும் உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பு கேரட்
தோட்டக்கலை நிபுணர்கள் கருத்துப்படி, கருப்பு கேரட் ஆரஞ்சு கேரட்டை விட சில சத்துக்களில் மேலோங்கி உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, எதிர்காலத்தில் நீலகிரி மாவட்டத்திலும் இதன் வணிக சாகுபடிக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை முயற்சியை குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைத் துறை அலுவலர் நித்தியா, உதவி தோட்டக்கலைத் துறை அலுவலர் குரு ஆகியோர் கண்காணித்து, அதன் வளர்ச்சி நிலையை ஆய்வு செய்தனர். இந்த வெற்றிகரமான சோதனை, தோட்டக்கலைத் துறையின் புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகளும் இந்த புதிய கருப்பு கேரட் சாகுபடியை வியப்புடன் கண்டு செல்கின்றனர் என்று சிம்ஸ் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
