மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு அரங்கம்
ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த போதிய இடம் இல்லாததால் ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் கடும் நெருக்கடி ஏற்படுவது வழக்கம். இதனால் பார்வையாளர்கள் அனைவருமே இந்தப் போட்டியை காண முடிவதில்லை. இதன் காரணமாக அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான நிரந்தர அரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக அலங்காநல்லூரில் கீழக்கரை என்ற கிராமத்தில் 65 ஏக்கா் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை அதிகாரிகள் சார்பில் அந்த பகுதியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து இதற்கான ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டது. இந்நிலையில், அந்த ஒப்பந்த புள்ளியை நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

