BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மருத்துவர் தின கருத்தரங்கம்
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினத்தையொட்டி மகளிர் சிறுநீர்வியல் துறை சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமை ஏற்று துவக்கி வைத்த பின்பு சிறப்பு உரை ஆற்றினார். இதனையடுத்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘110 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

BA4, BA5 வகை கொரோனா
தமிழகத்தில் BA4, BA5 வகை கொரோனா வேகமாக பரவி வருகின்றன. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நோய் வந்தால் வயது வித்தியாச இல்லாமல் குழந்தைகள் முதல் அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது. கொரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்தி சில மாதங்கள் ஆகி விட்டதால் அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறைய தொடங்கியுள்ளது. எனவே பூஸ்டர் டோஸ் அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடுகள்
பத்துக்கும் மேற்பட்டோர் கூடும் இடங்களில் சமூக இடைவெளி விட்டு நிகழ்ச்சிகளை நடத்துவது அவசியம். கட்டாயமாக அனைவரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் கொரோனா விதிகளை பின்பற்றி பாதுகாக்க நடத்த வேண்டும். மேலும், ஈரோடு சினை முட்டை விவகாரம் குறித்த விசாரணை பத்து நாட்களில் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சென்னை மற்றும் மதுரையில் அரசு மருத்துவமனையில் கருத்தரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் பி. செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் விஜயா, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


