நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும், அறத்தை நிலை நாட்டவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன் என்று சொல்கிறார் ஸ்ரீ மஹா விஷ்ணு. மஹா விஷ்ணுவின் அவதாரத்தில் முதல் அவதாரம் மச்ச அவதாரம்.
ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது நாகலாபுரம் என்னும் சிறுகிராமம்.

இங்கிருக்கும் வேத நாராயண சுவாமி திருத்தலத்தில் திருமால் மச்ச அவதாரமாக அருள்பாலிக்கிறார்.
ஆலய அமைப்பு :
வேத நாராயண சுவாமி திருக்கோவிலின் நான்கு புறமும் ராஜகோபுரம் மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது.
ஆலயத்தின் இரண்டாம் பிரகார ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் மேற்கு நோக்கிய நிலையில் அருள்புரிகிறார்கள்.
மூன்றாவது கோபுரத்தைத் தொடர்ந்து ஷேத்தரபாலகர், தும்பிக்கையாழ்வார் அருளுகிறார்கள்.
கருவறையில் மூலவர் சங்கு, சக்கரம் அபய வரத ஹஸ்தத்துடன் வேத நாராயணர் என்னும் திருப்பெயருடன் மச்சவடிவில் ஸ்ரீதேவி, பூதேவி யுடன் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
வடமேற்கு மூலையில் வேதவல்லி தாயார் அருள் புரிகிறார். தென் கிழக்கு மூலையில் பக்த ஆஞ்சநேயர் அருள்புரிகிறார். மேலும் இங்கு லஷ்மி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், இராமர் இலட்சுமணன் சீதை தனி சந்நிதியில் இருக்கிறார்கள்.

திருமாலின் முதல் அவதாரமான மச்சாவதாரக் கோலத்தில் திருமால் மச்ச அவதாரத்தில் அருள்புரிவது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சம். பெருமாளின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறமாக இருப்பது சிறப்பு.
திருமாலின் மச்ச அவதாரத்தைக் குறிக்கும் இத்தகைய கோலம் பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாக. சித்திரமாக மட்டுமே பார்க்கமுடியும்.
அவதார வரலாறு :
கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களையும் திருடிக்கொண்டு மீன் வடிவம் கொண்டு கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான்.
பிரம்மன் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு மீன் வடிவில் கடலுக்குள் நுழைந்து அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.

திருமாலின் அவதாரங்களை விளக்கும் மச்ச அவதாரத்தில் இது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால் மச்ச அவதாரம் கொண்டு வேதங்களை மீட்டுக்கொடுத்ததால் இவர் வேத நாராயண சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
சூரிய பூஜை :
பங்குனி மாதத்தில் சில நாட்கள் கோவில் துவாரம் வழியாக மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படுகிறது.
வேத நாராயணன் மீது ஒரு நாள் பாதத் திலும், இரண்டாவது நாள் வயிற்றிலும், மூன்றாவது நாள் சிரசிலும் சூரிய ஒளி படுவதால் அன்றைய தினத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுகிறார்கள்.
இது சூரிய பூஜை என்றழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து கடலுக்கடியில் நீண்ட நாட்கள் அசுர னுடன் போரிட்டார். இதனால் குளிர்ச்சி அடைந்த அவரது உடலுக்கு சூரிய பகவான் வெப்பமூட்டினார்.

இதனால் ஒவ்வொரு வருடமும் வேத நாராயணனுக்கு பங்குனி மாதத்தில் 5 நாட்கள் சூரிய பூஜை நடத்தப்படுகிறது. இதனோடு நடத்தப்படும் தெப்பத்திருவிழாவும், பிரம்மோத்ஸவ மும் சிறப்பு வாய்ந்தவை.
இத்தலத்தில் நித்திய பூசையானது ஆறு காலமும் சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் திருமஞ்சனம் சிறப்பாக நிகழ்கிறது.
திருமாலின் மச்ச அவதாரக் கோலத்தைத் தரிசிக்க விரும்புபவர்கள் ஒரு முறை சென்று தரிசித்து வாருங்கள். பெருமாளின் அருள் பூரணமாய் கிடைக்கும்.

