முன்விரோதம் காரணமாக இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் ஓல்டு டவுன் உத்திரமாத கோயில் தெருவைச் சேர்ந்தவர் விமல் (32). இவர் மருந்து விற்பனையாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது குடும்பத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவர் குடும்பத்துக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு நாட்டாமை பதவிக்கு போட்டியிடுவதில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே வேலூர் கோட்டை பின்புறம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அசோகன் மகன்கள் மற்றும் ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் இணைந்து அப்பகுதியில் தனியாக இருந்த விமலை கத்தியால் குத்தி சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் சரிந்த விமலை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஓல்டு டவுன் பகுதியில் அசோகன் தரப்பினர் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாகவும், இது குறித்து காவல் துறைக்கு பலமுறை தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததே இத்தாக்குலுக்கு காரணம் எனக்கூறி தாக்குதலுக்கு உள்ளான இளைஞரின் உறவினர்கள் ஆற்காடு சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர், இளைஞர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

