அரியலூர் மாவட்டத்தில் மைத்துனர் தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெண் புகார் அளித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வடவீக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவரது மூத்த மகனான ராஜவளவனுக்கும், சத்யா என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜவளவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சத்யாவின் மாமியார் அமுதா அவரை தனது இரண்டாவது மகன் அருள்வளவனுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த சத்யா, இதுகுறித்து ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, ராஜவளவனை விவாகரத்து செய்யவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில் சத்யாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து கணவர் ராஜவளவனுடன் சேர்த்து வைத்துள்ளனர். இதையடுத்து ராஜவளவன், அவரது மனைவி சத்யா, இரண்டு பெண் குழந்தைகளை கணவனின் தம்பி அருள்வளவன், வீட்டிற்குள் அனுமதிக்காததால் அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் கடந்த சில மாதங்களாக தங்கி உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யாவின் மூத்த மகள் பூப்பெய்ததால் மாட்டு கொட்டகையில் இருப்பது பாதுகாப்பு இல்லை என வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார்.
இதனை அறிந்த கணவனின் தம்பி அருள்வளவன், வீட்டை பூட்டிவிட்டு சென்றதாகவும், இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா தனது கணவனுக்கும் இந்த வீட்டில் உரிமை உள்ளது எனக்கூறி, பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் அங்கு வந்த அருள்வளவன், சத்யாவை தவறான வார்த்தைகளால் திட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சத்யாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து சத்யா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

