ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தை பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
சியான் விக்ரம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம் மகான். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இத்திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்ரா படம்
கோப்ரா படத்தில் விக்ரம் 7 கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் கதாநாயகியாக கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனையடுத்து விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சியான்-61
இந்த படங்களுக்கு பிறகு பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் மூலம் இயக்குனர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் முதல்முறையாக இணைகிறார்கள். இந்த படத்திற்கு ‘மைதானம்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விக்ரம் பாடி பில்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் விக்ரம் 61 படத்தை தொடங்குவார் என்று தெரிகிறது. விரைவில் இத்திரைப்படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

