காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த வேலூர் சரக ஆய்வு கூட்டத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு தலைமையேற்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.ஜி.பி சைலேந்திர பாபுவை வேலூர் சரக காவல்துறை துணைத்தலைவர் மு. அனி விஜயா மற்றும் வேலூர் சரக நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் வரவேற்றனர்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் சரகம் சார்பாக நடந்த காவல் ஆய்வாளர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை டி.ஜி.பி சைலேந்திர பாபு ஏற்று கொண்டார். அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்பு சமூக விரோதிகள், போதை அசாமிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் சிறப்பு பயிற்சி பெற்ற காவல் ஆய்வாளர்கள் செய்து காட்டியதை பார்வையிட்டார்.
காவலருக்கு அறிவுரை
காவல் ஆய்வாளர்கள் தங்கள் உடலை சீராக வைத்துக்கொள்ள வேலூர் சரகத்தில் உள்ள வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட நான்கு மாவட்டத்திற்கும் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள உடற்பயற்சி உபகரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் டி.ஜி.பி சைலேந்திர பாபு வழங்கினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி சைலேந்திர பாபு, ‘காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு ஆய்வாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க தமிழக அரசு முடிவெடுக்கபட்டுள்ளது விரைவில் அரசாணை வெளியிடப்படும்.
வட மாநிலத்தவரை பணியில் அமர்த்தும்போது குற்ற பின்னணி உள்ளவரா என முழுமையாக தெரிந்து கொண்டு பணியில் அமர்த்தவேண்டும். அவர்களை குறித்தான விவரங்களை காவல் அலுவலகத்தில் சேகரித்து வைக்க வேண்டும்.
மேலும், மொபைல் போனில் ஆன்லைனில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும்’ என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.