விஜய் ஒரு மனிதாபிமானமற்ற அரசியல்வாதி என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் கி.வீரலட்சுமி விமர்சித்துள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பரஞ்சோதி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலத்தை அபகரிப்பு செய்ததாக கூறி, ஆதம்பாக்கத்தில் உள்ள லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை நிறுவன தலைவர் கி.வீரலட்சுமி ஆவண ஆதாரங்களுடன் புகார் அளிக்க வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கி.வீரலட்சுமி, “அதிமுக ஆட்சிக்காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பரஞ்சோதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிலத்தை அபகரித்து, விற்பனை செய்து விட்டதாக தகுந்த ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து ஏழு நாட்களுக்குள் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்றால், திருத்தணி கோயில் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட போகிறோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக மீது குற்றம் சாட்டுகிறீர்கள் திமுக மீது எந்த புகார் இல்லையா என கேட்ட போது, “அதிமுக ஆட்சிக்காலத்தில் தன்னையும், தங்கள் கட்சியினரையும் முடக்கியதோடு மட்டுமில்லாமல் சிறையில் அடைத்தனர். அதற்கு பழி வாங்க தொடர்ந்து அதிமுகவினர் மீது புகார் அளித்து வருகிறோம்.
மேலும் அதிமுகவினர் தன்னை தேர்தலில் போட்டியிட அழைத்தனர். அதற்கு ஒப்புக் கொள்ளாததால் எங்கள் கட்சியினை அழிக்க வேண்டும் என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அதிமுகவை பழிவாங்கவே நான் புகார் அளிக்கிறேன். அதுமட்டுமின்றி திமுக ஆட்சி காலத்தில் புகார் அளிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுகிறார்கள், அதனால் திமுகவினர் குறித்து நான் புகார் அளிக்கவில்லை” என்றார்.
தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய கி.வீரலட்சுமி, “விஜய் ஒரு மனிதாபிமானமற்ற அரசியல்வாதி. 41 பேர் இறந்து வடு மறைவதற்குள் மூன்றாமாண்டு துவக்க விழாவில் ஆட்டம் போடுகிறார். அவரை மரியாதையாக பேச வேண்டும் என எனது கட்சியினர் தெரிவித்துக் கொண்டதால் தான் மரியாதையாக பேசுகிறேன்” என கூறினார்.
விசில் சின்னம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வழங்கப்பட்ட பிறகு, சேப்பாக்கம் மைதானத்தில் விசில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்ட போது, ”தேர்தல் காலங்களில் இது போன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்வது வழக்கம். இதற்கும் மற்ற யாருக்கும் சம்பந்தமில்லை” என தெரிவித்தார்.

