ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில், போலீசார் அடித்து துன்புறுத்தியதாலேயே அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் புனிதன். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. இதனிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் புனிதன் மற்றும் எதிர் தரப்பினரிடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.
அப்போது எதிர்தரப்பினர் புனிதன் மீது நகையை திருடியதாக அளித்த புகாரின் அடிப்படையில், சங்கர் நகர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்த புனிதன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் (NBW) உள்ளது எனக் கூறி புனிதனை போலீசார் அழைத்துச்சென்று, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்ததாகக் கூறப்படுகிறது.
புனிதன் உயிரிழந்த செய்தி அறிந்து மருத்துவமனைக்குச் சென்ற உறவினர்கள், புனிதனுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைபாடு இருந்ததாகவும், கைது செய்யும்போது அதுகுறித்து தெரிவித்தபோதிலும், அவரை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் சிறையில் அடைத்ததாகவும் அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் புனிதனின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், சிறையில் அடித்து துன்புறுத்தப்பட்டதே மரணத்திற்கு காரணம் எனவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லும்போது, உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. மரணத்திற்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

