தமிழ்நாடு

விழுப்புரம் அருகே கஞ்சா போதையில் கொலை – மூன்று குழந்தையுடன் மனைவி நிர்கதி!

விழுப்புரம் மாவட்டம் , மயிலம் அருகே உள்ள வெங்கந்தூரை சேர்ந்தவர் ஞானவேல் (35). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பொய்யாதப்பன் என்பவரது வீட்டில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் சொந்த ஊர் சென்னை கன்னிகா நகர். அசோக் மீது சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் கஞ்சா பழக்கம் உடையவர். இவரது கஞ்சா பழக்கத்தால் கிராம மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்துள்ளார்கள்.

தொழிலாளி கொலை

இந்நிலையில், ஞானவேல் தனது வீட்டு கட்டுமான பணிக்காக பொருட்களை ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த அசோக்கிடம் ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கஞ்சா ஆசாமி அசோக் ஞானவேல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். அதில் ஞானவேல் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

பொதுமக்கள் சாலைமறியல்

இதனையடுத்து ஞானவேலை கொலை செய்த அசோக் மற்றும் உடந்தையாக இருந்த பொய்யாதப்பன் ஆகியோரை கைது செய்யகோரி உறவினர்கள் தீவனுர் கூட்ரோடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அபிசேக் குப்தா அவர்கள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கொலையாளி கைது

இன்று பெரியதச்சூர் காவல் துறை போலீசார் கொலையாளியான அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த பொய்யாதப்பன் என்பவரை கைது செய்தால் மட்டுமே ஞானவேலின் உடலை அடக்கம் செய்யப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர். போலீசாரின் பேச்சுவார்தை தொடர்ந்து ஞானவேல் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

இறந்தபோன ஞானவேலுவிற்கு விஜயகுமாரி என்ற மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இச்சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts